Friday, February 13, 2009

மனசாட்சி...13

உலகம் எவ்வளவு வேகமானது. அன்றைய காலகட்டத்தில் தலை குனிந்து பக்கம், பக்கமாக பத்திரிகை புரட்டி வாசித்த காலம் குறுகிப்போய் விரலின் நுனியில் உலகத்தின் வியப்புக்களை வீட்டினில் இருந்து தலை நிமிர்ந்து பார்த்து வாழும் இக்கால கட்டத்தில்..

கோபாலுவின் வாழ்வும் புயலும், சுறாவளியும் அடித்து ஓய்ந்து போன கதைபோல் அவன் தாய் இறந்த செய்தி கேட்டு அதற்காக தன்னை நொந்துகொண்டு ஆதரவற்ற அனாதைபோல் தனிமையை உணர்ந்து அதிலிருந்து மீண்டு, மீண்டும் தந்தையை வெறுத்து தாயை வணங்கி, வழமைபோல தன் அன்றாட கடமைகளில் கவனம் செலுத்தி வந்தவனுக்கு..

காலம் மாறமாற அவன் கதையும் மாறியது. அதிக காலம் அவன் படிப்பு தொடரவில்லை. அவனின் உதவியின்றி யாராலும் எதுவுமே செய்ய முடியாது போக அவன் படிப்பும் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்கு மிக முக்கியமான ஆலோசகராக பாட்டியும் முக்கிய காரணம்.தான் நடமாட முடியாது போக கோபாலை வேறு எங்குமே செல்ல தடையாகயிருந்தார்.

பருவ வயது.....வயது ஏறஏற அவனுக்கு வீட்டின் முன் முற்றம் கூட்டுவது பிடிக்காது போனது. பாடசாலைக்குச் செல்லும் கன்னிப்பெண்களின் கிண்டல்களுக்கு ஆளாகினான். அதனால் அதிகாலையிலேயே எழுந்து சென்று முற்றம் கூட்டி தன் கடமைகளை சரிவரச்செய்தான். அன்றும் அவன் அதிகாலை அவ்வாறு எழும்பி முற்றம் கூட்டும் போது அதிகாலை மலராக அவள் தென்பட்டாள்.

யார் அவள்...? தினமும் அதே வீதியால் காலையில் பூத்துக்கொண்டு போகும் அதே பெண். இன்று அவனுள் ஒரு மாற்றம். மங்களமான அதிகாலை, தென்னங்கிளிகளின் கீச்...கீச் இசையோடு, காகங்களின் உறவுகளை அழைக்கும் காக்கா சத்தம், அடுத்த வீட்டின் முற்றத்தில் யாரோ தண்ணீர் தெளிக்கும் சத்தம், இத்தனைக்கும் மத்தியில்.. ஆதவனின் வெளிச்சத்தில் மஞ்சள் நிறத்துடையாள் மெளனமாய் மதில் ஓரம் வழிந்து தெருவோரம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த செவ்வரத்தம் பூக்களை எட்டி எட்டி ஒரு கூடையை கையில் வைத்துக்கொண்டு ஆய்ந்துகொண்டிருந்தாள்.

விளக்குமாறுடன் வீதிக்கு வந்தவன் சட்டென்று அதனை ஒளித்துவைத்துவிட்டு பின்வாங்கி...அவளைக்கண்டும் காணாதது போல தலையைக்குனிந்தவாறு.....கேட்டை சற்று திறந்து வைத்துக்கொண்டு எப்படி எதைக் கையிலெடுத்துக்கொண்டு முன்னுக்குச் செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். அதற்கிடையில் அவன் மூச்சு வாங்கியது. ஒருபோதும் இல்லாத மின்சார காந்த உணர்வில் கண்கள் சிவந்து கொண்டன. தான் அணிந்திருக்கும் மேல் உடுப்பை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டான். கை விரல்களினால் தலையை வாரிக்கொண்டான். மனதோ படக்படக் என்று அடிக்க....கேட்டை மீண்டும் திறப்பது போல வெளியில் சென்றான். அப்போதும் அவன் கண்கள் யாராவது பார்த்துக்கொண்டால் நிலமை என்னாவது என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்தான்....ஒருபோதும் இப்படி அவனை எதையுமே சிந்தித்ததில்லை. இன்று அவள் பார்வை படவே அவனுள் இந்த மாற்றம்...

அப்போதுதான் கவனித்ததாக பொய்யான பார்வையை அவள் மீது இமைகளை உயர்த்தி பார்த்தான்....உள்ளுக்குள் புன்னகை. உதட்டினில் சாந்தம். அவள் ஒரு கையிலே கை கூடையை கோர்த்துக்கொண்டு எட்டி எட்டிப் பறிக்கும் அழகை ரசித்துக்கொண்டு.....வேறு பூக்கள் வேணுமா....வீட்டு முற்றத்தினுள் இருக்கு கொண்டுவரவா என்றான்...தயங்கித் தயங்கி கேட்டான்...

அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....யெஸ் ப்ளீஸ்....

பூத்தும் பூக்காததும் போல இருந்த பூக்களை அதுவும் அவன் மனக்காதல் போல் நிறைய பிடுங்கினான். மிக அவசரவசரமாக அந்தக்கூடை நிறைய பல வர்ண பூக்களால் அலங்கரித்து அவள் கையிலே அவன் கொடுக்க அதனை தாங்ஸ் என்று அவள் வாங்கிக் கொள்ளவும் முதல் முறையாக இருவருள்ளும் மனசுகள் இடம்மாறிக்கொண்டன.

ஏதாவது விசேசமா..? அவனாகக் கேட்டான்..

இப்ப எங்கட ஸ்கூலில நவராத்திரி விழா நடக்குது. ஒவ்வொரு நாளும் பூக்கள் கொண்டு போகவேணும். ஏன் உங்கட ஸ்கூலில இல்லையா..? டப்டப்பென்று பேசினாள்.

இதுபோல் ஒரு போதும் யாருடனும் பேசாத கோபால், எந்தப்பெண்ணும் அவனுடன் பேசாத நிலையில் முதன்முதலில் அவள் வார்த்தையில் தடுமாறினான். மறு வார்தை பதில் சொல்லமுடியாத குழப்பத்தில் நாணிக்குறுகி நின்றான்.

சொல்லுங்க உங்க ஸ்கூலில சரஸ்வதி பூஜை இல்லையா....

மீண்டும் அவள் கேள்வி....பதில் சொல்லுவதற்கிடையில் அவன் இருதயம் தண்டவாளத்து ரயில்போல 100 கிலோ மீற்றர் வேகத்தில் படபடத்தது போய்க்கொண்டிருந்தது.

இதற்கு என்ன பதில் சொல்லுவது 15 வயதுச்சிறுவன், பாடசாலை போகவில்லை என்றதை சொன்னால் அவமானமாகயிருக்கும் என்று எண்ணி...அங்கேயும் நடக்குது என்றான்...

மீண்டும் அவள் தாங்கியூ என்று சொல்லிக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.அவள் அருகில் இருந்த போது எல்லா பூந்தோட்டங்கள் அவள் மட்டும்என்றே அவனுக்கு இருந்தது. அவள் செல்லச்செல்ல அவன் மனது பாலைவனம் போல இருந்தது.
அன்று அவன் எந்த வேலை செய்தாலும் பலதடவை சரிபார்த்துக்கொண்டான். தான் அதனை செய்தேனா, இதனைச்செய்து விட்டேனா என்று மீண்டும் மீண்டும் வேலை செய்தான். அவன் மனது அவனிடத்தில் இல்லை. அடிக்கடி அந்த மஞ்சள் நிற தேவதை அவன் கண்ணுக்குள் நிறைய பூக்களின் நடுவே மலர்ந்து மலர்ந்து மணம் பரவிக்கொண்டிருந்தாள். பல தடவை வீதிக்குச் சென்று பார்த்தான். அவள் வருவாளா...வருவாளா என ஏங்கினான். பூ மரங்களில் இருந்த மொட்டுக்களைப்பார்த்து வேண்டிக்கொண்டான்.....நாளையும் பூத்து என் மனநாயகிக்கு உதவுங்கள் என்றான். அவனுள் ஏற்பட்ட மாற்றம் நாளைடைவில் வாசுகிக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது. ஏதோ விபரீதமாக அவன் செய்கைகள் காணப்படுவதுபோல அவதானித்தாள். கடைக்குப்போவதாகயிருந்தாலும் பல தடவை கண்ணாடி முன்னின்று தன்னை அழங்கரித்தே போவான் கோபால்......

சந்திப்புக்கள் தொடர்ந்தன...மலர்கள் பறிக்க வந்த மங்கை இப்போது இவன் மனதையும் பறித்துவிட்டாள். நவராத்திரியும் முடிந்தது. அந்த 9 நாட்களும் இவனுள் ஆய கலைகள் 64 ம் உள்ளம் முழுக்க பரவியிருந்தது. அவளும் தினமும் வருவாள். அவள் முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு வந்திருந்ததைக்கண்டான். மறு நாள் அவனுக்கும் வந்திருப்பதைக் கண்டான். தனக்குள் சிரித்துக்கொண்டான். காதலை சொல்லாமல் கன்னங்கள் சொல்லியது.

அவள் பெயரை கேட்டு அறிந்தவன்...அடிக்கடி தன் உள்ளங்கையில் அவள் பெயரையும் தன் பெயரையும் எழுதினான்....மதுமிதா, கோபால் என்று எழுதினான். அவளுள்ளும் அதே எண்ணங்கள். அடுத்த தெருவில் அவள் இருப்பதையும் அறிந்த அவன் அடிக்கடி அவளைக்காண அந்த வீதியால் சுற்றிப்போய் கடைக்குப்போய் வருவான். இருவருள்ளும் பார்வைகளும் அன்பான நலம் விசாரிப்புகளும் வார்ததைகளில்லாமல் வெறும் புன்னகையினால் மட்டுமே காதலாக வளருகிறது.

நிலைக்குமா...? நீடிக்குமா..?
அடரும்..

-----------------
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8929&hl=
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி...12

நாட்கள் வெகுவரைவாக செல்லத்தொடங்கின...கோபாலுவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அந்த வீட்டில் வளரத்தொடங்கினான். காலையில் தினமும் முற்றம் கூட்டும் போது பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததை, வாசுகி கவனித்துக்கொண்டாள். அதன் பயனாக ஈஸ்வரனிடம் சொல்லி கோபாலை பின்னேரங்களில் அயலிலுள்ள ஒரு வீட்டில் டியூசனுக்கு அனுப்ப முடிவுசெய்து கொண்டார்கள். கோபாலுவிற்கும் அது பெரிய சந்தோசத்தைக்கொடுத்தது. தினமும் தன் வேலைகளை முடித்துக்கொண்டு படிக்கப்போவதற்கு ஆர்வமாக தன்னை தயார் படுத்திக்கொண்டான்.
அதன் பயனாக தன் அம்மாவிற்கு ஓர் கடிதம் எழுதினான்...
அன்புள்ள அம்மாவிற்கு..உங்கள் அன்பு மகன் கோபால் எழுதிக்கொள்வது. நீங்களும், அப்பாவும் நலமாகயிருப்பதாக எண்ணுகிறேன்.
அம்மா நான் இங்கு வந்த நாட்தொடக்கம் நன்றாக இருக்கிறேன். உங்களைள விட்டுப்பிரிந்த துயரம் மட்டும்தான் அடிக்கடி என்னை வாட்டும். மற்றப்படி நான் எல்லோருக்கும் அன்பான கோபாலாக நடக்கிறேன். இப்பொழுது என்னை பின்நேரத்தில் டியூசனுக்கும் வாசுகியம்மா அனுப்பி படிக்கவைக்கிறாங்க...ரொம்ப பெரிய ஆளாக வந்ததும் உங்களை நான் என்கூட வைத்திருப்பேன். ஏம்மா நீங்க கூட என்னைப் பார்க்க வரவில்லை...? இங்கு வருவதானால் நிறைய பணம் செலவாகும். இப்ப வேண்டாம். நான் பணம் அனுப்பி வைத்ததும் வாருங்கள். அப்பாவும் பாவம் உதவிக்கு யாருமின்றி தனியாக கஸ்டப்படுவார் என்று நினைக்கிறேன். நான் எழுதும் அட்ரசுக்கு பதில் போடுங்கள்.
இப்படிக்கு உங்கள் நினைவால் வாழும்.
அன்புமகன் கோபால்.
கடித்ததை எழுதிமுடித்ததும் அதனை போஸ்ட் செய்வதற்கு வாசுகியிடம் கொடுத்தான் கோபால்...வாசுகியும் அதனை வேண்டி பார்த்துவிட்டு ம்.கெட்டிக்காரன்...உன் எழுத்துகூட முத்துமுத்தாக அழகாகயிருக்கு.நாளைக்கே ஐயாட்ட கொடுத்து போஸ்ட் பண்ணி விடுகிறேன் சரியா....
கோபால்...சின்ன பாப்பா ஒரே அழுகிறாள் கொஞ்சநேரம் வெளியில கூட்டிட்டு போய்வாப்பா.... டினர் செய்யவிடுகிறாளில்லை. ம்...இந்த மாமியிருந்தாலாவது கொஞ்சம் உதவியாகயிருக்கும்..
அம்மா பாட்டி எப்ப வருவாங்க.....
யாருக்கப்பா தெரியும்..அவங்க.சகோதரியாம் சொந்தம் விட்டுப்போகக்கூடாதென்று போயிருக்காங்க...அங்க ஏதாச்சும் சின்ன வாய்ச்சண்டை ஆரம்பிச்சதும் ஓடிவருவாங்க....
சிரித்துக்கொண்டு சொன்ன வாசுகி அடுப்படி நோக்கிப் போனாள்.
வெளியில் காரின் சத்தம்' கேட்கவே கோபால், சின்னபாப்பாவுடன்,ஓடிப்போய் கேட்டைத் திறந்துகொண்டான் ...சிரித்துக்கொண்டுவரும் ஈஸ்வரனின் முகம் வாட்டமாகக் காணப்பட்டது...கோபாலைக்கண்டதும்....சின்ன பாப்பாவை கையில் வாங்கி கொண்டு என்ர செல்லம்...அழவேணாம்....அழக்கூடாது அப்பா வந்திட்டன்...என்ற படி உள்ளே போனார்.கோபாலுவும் அவர் பின்னால போக கோபால்.....இனி இரவு நேரம் பிளாக்கியைப் போய் அவிழ்த்துவிட்டிட்டுவா...
சரிங்க ஐயா......என்று நாய்க்கூடு நோக்கி பிளாக்கி....என்று கூப்பிட்டபடி பின்பக்கம் போனான் கோபால்...
வாசுகி....
என்னங்க நேரத்தோட வந்திட்டிங்க....
இன்றைக்கு கடைக்கு பாண்டியன் என்று ஒருத்தர் வந்தார்....
யாரங்க அவரு.....
கோபாலுவின் அம்மா இறந்திட்டாங்களாம்...
அச்சச்சோ.........அடக்கடவுளே..இன்னைக்குத்தான் அவன் தன் அம்மாக்கு என்று கடிதம் எழுதித்தந்தவன்....பாவம்........இப்ப அவனை அனுப்பிவைக்கவேணுமே..
வேண்டாம்....அவரே சொல்லிட்டுப்போகிறார். அங்க எல்லா காரியங்களும் முடிந்துவிட்டதாம்...இனி இவன் அங்கு போனாலும் அவன் அப்பாகூட சேரமாட்டான்...ஆனா பாவம் அந்த மனுசன்தான்....எல்லா பக்கத்தாலும் வேதனையைத்தாங்கிக்கொண்டு வாழ்கிறார். இப்ப இவனுக்கு எப்படிச் சொல்லுவதென்றுதான் எனக்குத் தெரியல்ல..
ஏனங்க........அந்த அண்ணனை இங்க கூட்டிவந்து அவர் வாயால சொல்ல வச்சிருக்கலாமே....
ம்..நானும் அப்படி நினைச்சு அவரிட்ட கேட்டேன்.அவரோ மாட்டேன் என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார். தன்னைக்கண்டால் எப்படியும் தன் கூட வரப்போகிறேன் என்று அழுவான் என்று...
ஓமங்க.அதுவும் சரிதான் இப்ப நாங்க என்னதான் செய்யிறது...
இப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் இப்போதைக்கு அவன்கிட்ட ஒன்றுமே சொல்லவேண்டாம். அவன் படிப்பு குழம்பிவிடும். அதுமட்டுமல்ல அவன் ஏற்கனவே நொந்து போயிருக்கிறான்...நாங்க மிருகத்தனமாக நடக்கக்கூடாது...எங்களிட்டையும் பிள்ளைகள் இருக்கு.நாங்க செய்கிற நன்மை தீமைகள்தான் நாளைக்கு எங்கட பிள்ளைகளுக்கு வந்துசேரும்.அவனை நல்லா கவனியுங்க.பாவம் ஏழைகள் வயிற்றிலஅடிக்கக்கூடாது....நீங்க காட்டுற அன்பால அவனாக தாயின் பிரிவை அறிந்தாலும் தாங்கிற சக்திகிடைக்கவேணும்...இனிமேல் அவனுக்கு மாதம் மாதம் பாங்கில காசு போட்டுக்கொண்டு வரப்போகிறேன். அவன் இளைஞனாகியதும் அவன் சொந்த தொழில் செய்ய நாம வழிகாட்டியாகயிருக்கவேணும். எப்பவும்போல அவனிடத்தில அன்பாயிருங்க...சமயம் வரும்போது நானே சொல்லிடிறன். என் அம்மா வீட்டில இல்லாதது எனக்கு என்னவோ போலயிருக்கு....அவனோ சின்னப்பிள்ள...தாயின்ர பிரிவு மிகவும் பாதிக்கும்.
இந்தக்கடிதத்தை என்னங்க செய்யிறது. அதை போஸ்ட் பண்ணுவம். ஏதாவது பதில் அவன் அப்பாகிட்ட இருந்து வந்தா பார்ப்போம்.
உள்ளவங்களையே திரும்பிப் பார்க்காத உலகத்தில், எங்கையோ, பிறந்து இங்க வந்திருக்கும் கோபாலைப்போன்றோருக்கு அன்பு காட்ட, கருணை காட்ட மனிதருள் தெய்வங்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன..
அன்றிலிருந்து கோபால் அந்த வீட்டுப்பிள்ளையாக வளர்ந்தான்...மிகவும் சந்தோசமாக வாழ்ந்துகொண்டுவருகிறான். காலத்தின் மாற்றங்கள் அவன் பருவத்திலும் மாற்றம் காணப்பட்டது.
தொடரும்...
________________________________

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8782&hl=

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி.....11

என்னப்பா நாம எல்லாம் இருக்கோம் என்றாவது நினைச்சியா...இப்ப இப்படி அநியாயமாக சாகடிச்சிட்டியே......நீ நல்லாவா இருப்ப...

ஏன்டா மாயாவி உனக்கு என்ன பைத்தியமா பெத்த பிள்ளையை யாராச்சும் பணத்திற்காக அடைகு வைப்பாங்களா...? இப்ப அவன் ஆத்தா செத்துப்போய்கிடக்கு கடைசியா ஒரு தடவை தாய்ன்ர முகம் பார்க்கவேண்டாமா...சொல்லுப்பா...

இவன் ஒரே குடிதான்....அந்த ஒத்தபிள்ள கோபாலுவைவேறு அனுப்பிவச்சிட்டு அவங்க கொடுத்த காசில அன்னைக்கு ராத்திரி பூரா ஒரே குடிதான்......குடிச்சட்டு கம்முண்ணு கிடந்தானா....மத்தவங்களையும் தூங்க விடாம ஒரே ரகள...(கதை கட்டி ஊரை நம்ம வைக்கும் கூட்டத்தில் இவளும் ஒருத்தி..)

இவன் பணத்திற்காக எதைவேணுமானாலும் செய்யக்கூடிய ஆளப்பா..இந்தஏரியாவில நல்ல மனுசனாட்டம் நடமாடிட்டு இப்பதான் உண்மைதெரியுது....

ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுக்கொண்டு இருந்தார்கள்.....மங்காவிற்கு டொக்டரின் ஆலோசனைப்படி ஊசி மருந்துகள் கொடுத்தும் அவை வேலைசெய்யவில்லை. தாமதாக உசிமருந்து கிடைத்தபடியால அவள் இறைவனடி சேர்ந்தாள்.

நோய்வாய்ப்பட்டமையால் இயற்கை மரணம் என மரண அத்தாட்சிப்பத்திரம் எழுதியபின்பு உடனே அடக்கம் செய்யவும் ஏற்பாடு நடைபெற்றது.....

ஏதோ காரியம் ஆனால் சரி என்பது போல அயலவர்கள் கூடிநின்று மங்காவின் உடல் புதைக்கப்ட்டது.

யாருமே மாயாவிக்கு ஆறுதல் கூறக்கூட கிட்டப்போகவில்லை. தனிமையில் புழுவாய் துடித்தான்.

வெளிப்பார்வையின் கண்களுக்கு தெரிந்ததெல்லாம்....மாயாவி ஒரு மனசாட்சியில்லாத மிருகம். பணத்திற்காக பெற்ற பிள்ளையைக்கூட அடைகுவைப்பவன். ஈவிரக்கமில்லாத அரக்கன். வெறிகாரன், மனைவி மக்களை காப்பாற்றத்தெரியாதவன்.

ஆண்டவன் ஒருவனைத்தவிர அவன் பணத்திற்காக பட்ட துன்பம் அந்த ஏழை பட்டபாடு, இலவச மருத்துவம் என்ற பெயரில் அங்குள்ள மருந்துகளை பணத்திற்கு விற்பது..அதனால் மாயாவி போன்ற ஏழை நோயாளர்கள் பாதிக்கப்பட்டது இவையாவுமே தற்போது அவனையும், ஆண்டவனையும் தவிர வேறுயாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

மாயாவியிடம் எல்லோரும் கேட்டுப்பார்த்தார்கள் எங்கதான் உன் மகனை அனுப்பிவச்சாய் சொல்லுப்பா நாம போய் கூட்டிவந்து கடைசியா தாயின் முகத்தை பார்க்கட்டும் என்று...

யாருடைய கேள்விகளுக்கும் பதில் கூறவில்லை. அவன் மெளனமாகயிருந்தான்....அப்ப கூட ஒரு முதியவர் அடிச்சுக்கலைக்கவேணும் இந்த நாய என்றார்....

அவனுக்கு மட்டும் தெரிந்தது....

கண்ணை விரலால் கீழே அழுத்தி லைட் அடித்துப் பார்த்த டாக்டர்.....

ம்....சொறி மாயாவி....உங்க வைப் மங்காவிற்கு ரொம்ப பாட் கெண்டிஷன். பள்ஸ் குறைஞ்சுகொண்டே போகுது....இன்னைக்கு நைட் 12 மணிக்கு மேல அவங்க உயிரோடு இருந்தாங்க என்றால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க...கண்ணில பார்த்தேன்...பிழைக்கிறதிற்கு நோ சான்ஸ்......வெரி சொறி....இன்னும் 6 மணித்தியாலம் இருக்கு. இனி அவங்களால பேசவும் முடியாது.....முடிஞ்சா உங்க பையனை கூட்டி வாங்க....ஆனா..........நீங்க போகாகதீங்க வேறு யாரையும் அனப்பிவையுங்க...........எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.முடிஞ்சவரையில பக்கத்தில இருங்க.....டேக் கெயார்.

மனம் படும் வேதனையில் கண்ணீர் அருவிபோல ஓட அவன் யாரை உதவிக்கு கூப்பிடுவது...???

வீட்டிற்குக்குள் ஓடிப்போய் ஈஸ்வரன் கொடுத்த அட்ரசை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு அவன் இருக்கும் ஏரியாவில் நல்ல நண்பரான பாண்டியண்ணனிடம் கொடுத்து விசயத்தை சொல்லுகிறான்...அவரோ......

இனி எல்லாம் ஆகாது மாயாவி. அவன் இனி வரும் வரையில் ஐஸ்ரூமில வைச்சிருக்க எல்லாம்..அல்லது வீட்டிலதான் 2 நாள் வச்சிருக்கக்கூட முடியாது. பணம்தான் அதிகம் செலவாகும். நான் இன்னைக்கு கொழும்பு போகிறன். வர ஒரு கிழமையாகும். முடிஞ்சா பையனை கூட்டி வர ஒழுங்கு செய்யிறன். ஆனா அவன் வந்தாலும் உன்கூட ஒட்டமாட்டான்.....உன்னில சரியான கோபமாகத்தான் இருப்பான்....ஆண்டவன் இருக்கான் நீ யாரைப்பற்றியும் கவலைப்படாதே.......ஆகவேண்டியது நிறைய இருக்கு...இந்தாப்பா இதில 2000. ரூபாயிருக்கு செலவிற்கு வச்சுக்கோ...

ம்.பணம்..பணம்.....இந்த பாழாய்ப்போன பணம் இப்ப என் கையில இறந்த உடலுக்கு கிடைக்கிற பணம் அப்ப நான் கதறினேனே......கிடைச்சுதா..அப்பவே கிடைச்சிருந்தா என் மங்கா என்னைவிட்டு போயிருப்பாளா.இல்ல என் மகனைத்தான் நான் அனுப்பிவச்சிருப்பனா...?

சரி...சரி மனசை தேற்றிக்கொள்......நடந்ததை நினைச்சு இனி வருத்தப்பட்டு என்ன பிரையோசனம்...எனக்கு நேரமாகுது நான் வாறன்.

வெறும் வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு விடைபெற்றார் பாண்டியன்.

யாருக்குத்தெரியும் இந்த உண்மை..?

அவனையும், அந்த அண்ணனையும் தவிர வேறுயாருக்கும் தெரியவாயப்பில்லை. மீண்டும் கூடியிருந்து வாய்க்கு வந்தபடி திட்டுக்களும், பேச்சுகளும் ஏராளம்.

மனம் நொந்து அழுதான்...இரவிரவாக அழுதான்.ஐயோ.ஐயோ எனக்கதறினான்.தனிமையில் வெந்தான்......யாருமற்ற அனாதைபோல உணர்ந்தான்....தான் செய்த தவறு என்ன என்று தனனைத்தானே கேட்டு நொந்துகொண்டான்.....எல்லாமே முடிந்துபோன கதை...

நாட்கள் நகர்ந்துகொண்டன....பல நாட்கள் மூடியிருந்த அவன் சயிக்கிள் கடை மீண்டும் திறந்தது. அவன் இப்போது பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு செயல்பட்டான். எதற்காக ஏன்...?

பொறுத்திருங்கள் தொடரும்...

--------------------
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8715&hl=
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

Wednesday, January 14, 2009

மனசாட்சி.....10

மனம் தினம் படும் வேதனையை யாரிடம் போய்கூறுவது....எல்லாமே புது இடம்....பாட்டியின் அதட்டலில் எழுந்த கோபாலுக்கு வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான அட்டவனையை பாட்டி வாசித்துக்கொண்டிருந்தார்....
அதன் ஆரம்பமாக கேட்டைத்திறந்து வாசலில் தண்ணீர் தெளித்து முற்றம் கூட்ட அந்தச்சிறுவனை விளக்குமாறும் கொடுத்து அனுப்பினா பாட்டி....
அவன் உயரத்திற்கு இருமடங்காக அந்தத்தடி.....கூட்டிப்பழக்கமில்லாதவன்....கூட்டுகிறான்....கூட்டக்கூட்ட திரும்பத்திரும்ப குப்பை சேருகிறது....

எட்டிவந்து பார்த்த வாசுகி....கோபால்......காற்று இந்தப்பக்கமாக வீசுதடா.நீ எதிர் பக்கமாகநின்று கூட்டினால் கூட்டமாட்டாய்.....அடுத்த பக்கமாக கூட்டு.....சரியா...

நீர் தெளிக்க தேவையில்லை.அவன் கண்ணீர் தரையெங்கும் முத்துமுத்தாய் தரையைத்தொட்டபடி மனம் வேதனைப்படுகிறேன்.பல மணிநேர போராட்டத்தின் பின்பு அவ்விடத்தை தன் சின்னஞசிறு கைகளால் குப்பைகளை அள்ளி துப்பரவு செய்து விட்டு...பாட்டியின் அடுத்த வேலையாக நாய்கூடு துப்பரவு செய்தலுக்கு போகிறான்....

நாயிற்கு கிட்ட போகாமல்.....அழுகிறான்.....தனக்கு மட்டும் கேட்கும் விசும்பலில்.....பயத்தால் அழுகிறான்......இவன் அழும் பாஷை, எங்கோ இவன் இதயத்தில் இருக்கும் அந்த வேதனை ....அந்த ஐந்தறிவு ஜீவன் நாய் பிளாக்கிக்கு.. விளங்கியிருக்கவேணும்....

வாலையாட்டியது......நாக்கை நீட்டிக்கொண்டு மெல்ல கால்களை மடித்து நிலத்தில் வைத்து இருந்து கொண்டு தலையை மேலே உயர்த்திக்கொண்டு மெல்ல ங்..ங்....என்று ஒலி எழுப்பியது அந்த நாய்....

கையை மெதுவாக நீட்டினான்...கோபால்.....கையை நக்கியதுடன்....இழுத்துக்கொண்டான்....விரல்களை பொத்துக்கொண்டு......கண்களை இறுக்க மூடினான்....மீண்டும் நாய் நக்குவதை உணர்ந்து கண்ணைத்திறந்து பார்க்கிறான்....அது இன்னும் கிட்ட அவனருகில் வந்து நின்றது....மீண்டும் மெதுவாகத்தொட...பேசாமல் இருந்த நாயைக்கண்டவுடன்....நாயைப்பார்த்து சிரித்தான்....தடவினான்....

ஓ.......இப்போது அவன் நண்பனாகிவிட்டான்......அந்த சந்தோசத்தில் எழுந்து ஓடினான்.......அந்த நாயும் அவன் பின்னால் ஓடியது....ஒரு சுவர் மறைவில் நின்று எட்டிப்பார்தான்.......அதுவும் எட்டிப்பார்த்தது......அவன் மிகவும் சந்தோசப்பட்டான்......

டேய்......அங்க என்னடா சத்தம்......நாய்கூட்டை துப்பரவாக்கிட்டியோ...

ஊப்ஸ்.....பாட்டி......என்று தலையில கைவைத்துவிட்டு...ஓடி வந்து நாய்க்கூட்டை துப்பரவு செய்தான்....ஆசையாக அந்த வேலையை செய்தான்......சாப்பாட்டுத்தட்டம் எல்லாம் வடிவாகக் கழுவி....அதன் தண்ணீர் வைக்கும் குட்டிச்சட்டி எல்லாம் வடிவாக கழுவி....அழகாக வைத்தான்..

அதன் பின்பு முயல்கூடு துப்பரவு செய்தான்...அதனையும் அவன் அன்போடு அவைகளை தழுவி அவைகளோடு விளையாடி மகிழ்ந்தே செய்தான்.

நாளாந்த வேலைகளில் அவன் கவனம் ஓய்வின்றிச்செல்ல.....பகல் முழுக்க வேலை செய்த அலுப்பில் நன்றாகத்தூங்கிவிடுவான்..அவன் மனதில் அவன் தாய் கண்ணை விட்டு அகலாத கருவிழிபோல மனதில் ஒவ்வொரு நிமிடமும் அவனோடு கூடவே இருந்துகொண்டாள்....

எப்பொழுதுமே....அந்த வீட்டில் பாட்டி முதல்...கடைசிப்பாப்பா வரைக்கும் கோபால்....கோபால் தான்......
அவன் பெயரை சொல்லிச்சொல்லி எல்லா வேலைகளும் நடக்கும்...அவன் தெருமூலையில் இருக்கும் கடைக்குப்போனால்கூட அவன் இல்லாத அந்த அந்த 10 நிமிடமே பெரும் பாதிப்பை உண்டு பண்ணுவது போலயிருக்கும்....

அவனுக்கென்று தனியாக சாப்பாட்டுத்தட்டம், டம்ளர்....இதைவிட ஒரு சின்ன இடம் படுக்கைக்கு....அவன் வாழ்வு......அங்கேயே மேடைபோட்டது. அதில் ராஜாவும் அவன்தான் மந்திரியும் அவன்தான்...

யாருமில்லாத போது பறந்து திரியும் பட்டாம்பூச்சியாய் அவன் சுதந்திரமாக பறப்பான்...

அதிகநேரமாக அடித்துக்கொண்ட டெலிபோன் மணிச்சத்தம் கேட்டு....என்ன மாமி பக்கத்திலதானே இருக்கிறியள் அதை எடுக்கக்கூடாதோ...

ஐயோப்பா....நா மாட்டேன்.....நமக்கேன் ஏன் இந்த வீண்தொல்லை.

ஹலோ.....ம்.சரி அனுப்பிவைக்கிறன்...

என்னவாம் கடைக்கு போனவுடனேயே போன் போடுரார் மகன்..

கோபாலை கடைக்கு அனுப்பிவைக்கட்டாம்...மரக்கறிகள் வந்திருக்காம் குடுத்தனுப்புகிறாராம்.

சொல்லிக்கொண்டே கோபாலை கூப்பிட்டு குளித்துவிட்டு உடுப்பு மாற்றி கடைக்கு ஐயா வரட்டாம் போய் வாறீயா...

சரிம்மா...

அவன் வீதியால போகும்போது ஒரு போதும் நடந்து போகமாட்டான்....ஓட்டம்தான்...ஓடிப்போய் மூச்சுவாங்க கடையில நின்றான்.அது ஒரு சாப்பாட்டுக்கடை...அங்கு சமையல் செய்பவர்கள் முதல் அனைவரும் கோபாலில் மிகவும் பிரியமானவர்கள். அங்கு போனால் அவன் நன்றாக சாப்பிட்டு வருவான். இன்று அங்கு போனவனுக்கு.....ஆச்சரியம் காத்திருந்தது...

புதிய சயிக்கிள் ஒன்றை வேண்டி வைத்திருந்தார்..ஈஸ்வரன்...அன்போடு கோபாலவிடம் கொடுத்தார்.....காலையிலையே கடைக்குப்போய் உனக்காக வாங்கி வந்திருக்கிறன்.....இனி வெய்யிலுக்குள்ள நடந்து வராதே என்ன....விருப்பமா எனக்கேட்டார்...

ஆ........என வாயில் இருகைகளையும் வைத்துக்கொண்டு பிரமித்துப்போய் நின்றான்....அங்கு கொடுத்த பொருட்களையும் வாங்கிக்கொண்டு மின்னலாக வீடுநோக்கி விரைந்து வந்தான் கோபால்....மிகவும் குதூகலகமாக இருந்தான்.சிரித்துக்கொண்டான்.....பாட்டி மட்டும் எரிச்சல் பட்டாங்க.....மற்றப்படி அவன் சயிக்கிளை அங்கவுள்ள வாண்டுகள் அனைவருமே ஆசையாக தொட்டு பார்த்து மகிழ்ந்தார்கள்...
வாசுகியும்.....

கோபால் உனக்கு விருப்பமாகயிருக்கும் என்று நான் தான் ஐயாட்ட சொன்னான்....கவனமாகப் போய்வரவேணும் என்ன....

சரிம்மா.....

மீண்டும் என்ன நினைத்தானோ.......அம்மா......என்று கூப்பிட்டான்.

திரும்பிய வாசுகி என்னப்பா......என்ன.சொல்லு..தயங்காம சொல்லு.....

தாங்ஸ்.....என்றான் தயங்கியபடியும் சின்னசிரிப்புடனும்.

அட சமத்து...இதுகூட சொல்லத்தெரியுமா உனக்கு....சிரித்தக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள் வாசுகி.

அடிக்கடி துடைத்துக்கொண்டு......தனது போர்வையால் சயிக்குளுக்கு போர்த்து விட்டபடி இரவு நித்திரைக்கு போனான் கோபால்....

ஆனாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. தன் அம்மாவிடம் இதனை காட்டவேண்டும் அம்மாவிற்கு இது பற்றி சொல்லவேண்டும் என ஆசைப்பட்டான்.பின்பு ஒரு வித கவலை..மீண்டும் கண்ணீர்..மீண்டும் தூக்கம்..

தூக்கத்தில் கனவில் வந்துபோவதெல்லாம் அவன்தாய் மங்காதான்.அவன் கனவையோ...அவன் பேச வேண்டும் என்று ஆசைப்படும் பேச்சுக்களையோ யாருமே செவிமடுப்பதில்லை. அதற்கு கோபாலுவும் ஒருபோதும் துணிந்து யாருடனும் பேசுவதில்லை.

இனிமையான நாட்களாக அவன் வாழ்வு போய்க்கொண்டிருந்தது.

தொடரும்...
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8714

மனசாட்சி.....9

செளகரியமான வண்டியில், ஈஸ்வரன் அவர் மனைவி வாசுகி, அவர்கள் பிள்ளைகள் விஷாலினி, விஷ்ணு, விஷாகன்....இவர்கள் பாட்டி
ராஜேஸ்வரி...டிறைவர் செபஸ்தியான் மற்றும் ஓர் மூலையில் சாய்ந்திருக்க மனமின்றி நீர் வற்றாத விழிக்குளமாக யன்னல் ஓரம் பார்த்தபடி 8 வயது நிரம்பிய கோபால்.....

அவரவர்கள் எண்ணக்கனவுகள் நித்திரையிலும், பாடல் கேட்பதிலும், பழைய விடங்களைச்சொல்லி கதைப்பதுமாக பயணித்த அன்றைய பொழுதிற்கு முடிவுரையாக ரெத்தினபுரி மாவட்டத்தினுள் வண்டி உட்பிரவேசிக்கும் போது அதிகாலை 7 மணி....அங்கிருந்து சீரான பாதையூடாகச்சென்ற வண்டி ஒரு முடக்கில் திரும்பவும்....தார்போட்டிருந்தும் ஒழுங்காகஅமையாத .. பள்ளமும் திட்டியுமான ஓர் வீதியில் புழுதியைக்கிளப்பிக்கொண்டு சற்றுத் தூரம் ஓடி.....உயர்ந்த வீட்டின் முன் வண்டி நின்றது.....

பயணஅலுப்பைக் கைகளை மேலே உயர்த்தி விரல்களை கோர்த்துக்கொண்டு அலுப்பகற்றினார் ஈஸ்வரன்...

ஈஸ்வரன் சாவி போட்டு பூட்டைத்திறந்து கொண்டு வாலையாட்டிவரும் நாயை தடவிக்கொண்டு.....வீட்டினுள் யன்னல்களின் கொழுக்கிகளை தட்டி இதுவரை நாள் பூட்டியிருந்த வீட்டிற்கு காற்றோட்டம் வரும்படி ஆவணசெய்தார்...
டிறைவர் செபஸ்தியான் ஒருகையில் கடைக்குட்டி விஷாகனைத்தூக்கிக்கொண்டு மறு கையில் ஒரு பெட்டியையும் காவிக்கொண்டு வீட்டினுள் சென்றான்....

ஒவ்வொருவராக தத்தமது வேலைகள்.....
வண்டியை விட்டிறங்கிய கோபால் அப்படியே நின்றான் ...சுற்றவரப் பார்த்தான் தூரத்தே பெரிய மலை ஒன்று காணப்பட சுற்றிவர ஆங்காங்கே தென்னை மரங்கள் அதிகமாகப் பச்சைப்பசேலெனக்காணக் காலையில் பூத்த புது மலர்கள் காலைக்கதிரவனின் கதிர்கள் பட்டு பூத்துநிற்க....ரீங்கார ஓசையோடு கருவண்டுகள் மகரந்தத்தேனுக்கு வட்டமிட.........அந்த வீதியில் அநேகமான கல்வீடுகள் மாத்திரமே காணப்பட அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்...

நாய் குரைத்தது.....

சத்தம் கேட்டு ஓடி வந்தான் விஷ்ணு.....அம்மா......அம்மா.....கூப்பிட்டான் சத்தமாக......

அட ஏன்டா அங்கேயே நின்னுட்டாய்.வாடா.....உள்ள வாடா......ராஜேஸ்வரிப்பாட்டியின் கணீர் என்ற குரலில்...

தயங்கினான் கோபால்........

அடடா வாடாப்பா......என்ன பெயர் மறந்தட்டேன்......வாசல் வந்து எட்டிப்பார்த்த ஈஸ்வரன்....

அப்பா அவன் பெயர் கோபால்.....மூத்தபொண்ணு விஷாலி டக்கென்று கூறினாள்....

ஓ......கோபால் என்ன......சரி உள்ள வரச்சொல்லு.நாயிற்குப்பயப்பிடுறான் போல.....

வா கோபால் வா.....பயப்பிடாதே நம்ம பிளக்கி உன்ன ஒன்னும் செய்யாது வா....என் வீட்டைச்சுற்றிகாட்டுறன்.எங்ககிட்ட 2 வெள்ளை முயல்களும் இருக்கு....பார்க்கப்போறீயா..........வா....கோபால்...

ஆமாஆமா 1 என்னோடது மற்றது விஷாலியோடது....இனி உனக்கும் 2 ம் தருவோம்.என்ன.....விஷாலி......பதிலோடு கேள்வியுடன் கூறினான் விஷ்ணு...

முயல்கள் என்றவுடன்.....எங்கிருந்துதான் அவனுக்குத்துணிவு வந்ததோ.....உடனே மெல்ல ஒரு அடி முன்னால் வைத்தான்....பிளக்கி திரும்பவும்..குரைத்தது.....

பயப்பிடாதே பிளக்கி ஒன்னும் செய்யாது வா.....

பயந்தும் பயப்பிடாமலும் விஷ்ணு ... பின்னால் சென்றான் கோபால்.......உள்ளே சென்ற பாட்டி விஷாலி.......வாம்மா....பல்தேய்ச்சுக் குளிக்கவேணும் என்று கூப்பிடவும்.......விஷாலியின் பதில் வராதபடியால வெளியில் சென்று பார்க்கிறார்....பின்னால இருந்து சத்தம் வருகிறது.....ஓ...இவள் வந்தவுடனையே முயல்கூட்டிற்குப்போட்டாளோ......பாட்டியின் முணுமுணுப்போடு முயல்கூட்டருகே செல்ல.....கோபால் முகமலர்வோடு முயல்குட்டியைத் தூக்கித் தடவிக்கொண்டிருந்தான்....

டேய்.......முட்டாலே இப்படிக் கையில முயலை தூக்கிவைச்சிருந்தா அது செத்திடுமடா லூசே..........செவியில புடிச்சு தூக்கவேணுமடா......வந்த அன்றைக்கே காட்டிட்டியே உன்ர கைவரிசையை........உன்னை வைக்க வேண்டிய இடத்தில வைக்கவேணும்...போ.போ......இந்தப்பக்கத்தால போய் கிணத்துல அள்ளிக் குளிச்சிட்டு வா......கிடக்கிற அலுக்கெல்லாம் போகக்குளி......

விஷ்ணு கிணற்றடியை காட்டுப்பா....அப்படியே கட்டில துணிக்குப்போடுற பார்சோப்பையும் எடுத்துக்குடு சரியா....

பாட்டி....அவனைப்பேசாதீங்க பாட்டி பாவம் கோபால் அழுவுறான்....

சும்மாயிரு நீ.பெரியமனுசியாட்டம் கதைக்க வந்திட்டாய்...நீ போய் குளி பாத்தூறும்முக்குள்ள சுடுதண்ணி போட்டுக் கலக்கி வச்சிருக்கன்......

பாவம் அந்த பிஞ்சு மனங்களின் ஒரு நிமிட சந்தோசத்தைக்கூட பெரியவங்களான பாட்டியினால் பொறுக்கமுடியவில்ல....
நல்ல மனசுகளாக வளருவாங்க........நாளடைவில் உடல்தேயத்தேய மனசும் தேய்வடைகிற நிலமை இவர்களைப்போல ஒரு சிலரில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மை.....மனசாட்சியே இல்லாத இப்படிப்பட்டோர் வாழும்வரை நமக்கெங்கே விடிவுகாலம்....ம்...கர்த்தரே... நீதான் காக்கவேணும் அந்தப்பையனை...

மனதிற்குள் நினைத்தவாறு வாசுகி தந்த தேனீரை அருந்திக்கொண்டு வீட்டின் முன் கட்டப்பட்ட போர்ட்டிக்கோவின் கட்டில் இருந்தபடி மனங்கலங்கினார் டிறைவர் செபஸ்தியான்...

அப்பா...அப்பா......பாட்டி கோபாலுவை பேசுறாப்பா.அவன் அழுவுறான்......பாவமப்பா....பாட்டிகிட்ட சொல்லுங்கப்பா....பேசவேணாம்முன்னு...

சரி நான் பாட்டிக்கு சொல்லிவைக்கிறேன் சரியா....நீ போய் அம்மாட்ட ஏதும் வாங்கிச்சாபிடு......டி.வி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே பதிலுரைத்ததார் ஈஸ்வரன்.

அன்றைய பொழுதுகளின் நேரம் விரைவாகச்சென்று......சூரியனின் தூக்கத்தில் நிலவின் ஒளியில் சாப்பாட்டறையின் ஓர் ஒதுக்குப்புரத்தில் கோபாலுவின் தனிமையான தூக்கம்.....அவனால் தூங்க முடியவில்லை. அவன் தாய் கண்முன்னால் சிரித்துக்கொண்டு வருவதுபோலவும், அடுத்தகணம் நோய்வாய்ப்பட்டு ஹொஸ்பிட்டலில் இருப்பதும் மாறிமாறி நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு அழுகிறான்.........அவன் அப்பாவை நினைக்கும் போது முகத்தில் ஓர் மாறுதல்.......கொஞ்சமும் தன்னில் பாசமில்லாது தன்னை விலைக்கு விற்றுவிட்டார் என்று எண்ணி வேதனைப்பட்டான்.....அவன் சோகத்தைக்கேட்க யாருமே அங்கில்லை. யாரிடமாவது தன் தாயைப்பற்றி கேட்கவேண்டும் என ஆழுகிறான்...இனி நான் என்ன செய்யப்போகிறேன்.இனி என் அம்மாவைப்பார்க்கமுடியாதா....? எனக் கடவுளிடம் கேட்கிறான்......

படுக்கையை விட்டு மெல்ல எழும்புகிறான்......திறந்திருந்த யன்னல்ஊடாகப்பார்க்கிறான்.....அங்கே முழு நிலவு. ஆனால் அவன் கண்களுக்குத் தெரிவதெல்லாம் அவன் தாய் மட்டும்தான்....யன்னல் கம்பிகளினூடே கையை நீட்டுகிறான் அம்மா வாம்மா......ஓர் தென்னை ஓலையின் கீற்றினுள் மறைந்து காணப்பட்ட அந்த நிலவில் தன் தாயின் முக்த்தைப்பார்க்கிறான். யன்னல் கம்பிகளை கைகளால் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறான்.....பாட்டியின் காதில் கேட்டால் எனக்கு லூசா....மடையா எனப்பேச்சுக்கள் வருமென்று தெரிந்து சத்தம் வெளிவராமல் அழுகிறான்....

யாரிடமும் பேச்சு வாங்கியதில்லை.......அப்படி அப்பா பேசினாலும் மறு நிமிடமே தனக்கு ஐஸ்பழம் வாங்கித்தருவார்......தனிமையாகக்கூட உறங்கியதில்லை......இன்னும் அவனுள் வளரும் வேதனைகளுக்கு அவன் இதயம் தாங்க வேண்டும் என கடவுளை கும்புடுகிறான்.....மீண்டும் திரும்பிப் பார்க்கிறான் அவன் பாயருகே ஓர் கரப்பான் பூச்சி....அதனைக்கண்டவுடன் நடுங்கியபடி....கால்களை உயர்த்துகிறான்.......பூச்சி மெல்ல தன் இடத்தை மாற்றிக்கொள்ள.....தூங்காத இரவொன்றை முடித்துக்கொண்டு அதிகாலை யன்னலின் கீழே அப்படியே கால்களை சுருக்கிக்கொண்டு நல்லதூக்கம் கொள்ளுகிறான் கோபால்..

மறுநாள் விடியலில் பாட்டியின் அதட்டல் கிடைக்கும் என்றதை எண்ணாமல் இரவில் விழித்திருந்த விழிகள் இறுக மூடி துயில்கொண்டன.


தொடரும்....
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8518

Friday, December 5, 2008

மனசாட்சி.....8

உச்சி வெய்யில் உடலைத்தாக்க, உள் மனதோ அவனைத்தாக்க கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் வரை வழிந்தோட..ஏதும் அறியாத கோபால்......போகும் பாதையில் குறுக்காகப்போகும் ஆட்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும்......டிங்..டிங்டிங்...என்று வாயினால் ஒலி எழுப்பி பெல்சத்தம் போடவும்......தாகம் எடுக்க வீதியோரத்தே இருந்த தண்ணீர்க் குழாயைக் கண்டவுடன் சயிக்கிளால் மெல்ல இறங்கி.......கோபாலிடம் சயிக்கிளைக்கொடுத்துவிட்டு நிரைய நீர் அருந்தினான் மாயாவி.

அப்பா எனக்கும் தண்ணீர் விடாய்க்குதப்பா.......சொன்னவன் சயிக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு வலக்கை விரல்களை ஒன்றாகக் குவித்து வழிந்தோடும் தண்ணிரைப் பருகினான்....கோபால்.

கழுத்தில் போட்டிருந்த மெல்லிய துண்டை குழாய்தண்ணியில் நனைத்து அதனைப்பிழிந்து முகத்தைதுடைத்து கண்ணீரைக்கழுவினான் மாயாவி....அப்போது மகனை ஏறிட்டு பரிதாபமாகப்பார்த்தான்......மீண்டும் அவன் கண்கள் கலங்க ஆரம்பித்தது. மீண்டும் மகனையும் ஏற்றிச்சென்று அருகிலிருந்த பாட்டா கடைஒன்றிற்கு அருகில் நிறுத்தி.....கோபாலுவோடு அக்டையின் உட்சென்றான்....

அங்கே மகனுக்கு கால்செருப்பு ஒன்று எடுத்துத்தரும்படி விற்பனையாளரிடம் கூற , அவ்வாறே அவனுக்கு அளவாக..பாட்டா செருப்பு அவனுக்குப்பிடித்த நீலநிறத்தில் எடுத்துக்கொடுக்க....உள்ளம் பூரிப்படைந்து துள்ளிக்கொண்டிருந்தான் கோபால்....அளவான செருப்பு கிடைத்துவிட்டது. விலை ரூபா 99.99 சதமாகயிருக்க....மகேஸ்வரி அம்மா கொடுத்த அந்த 100 ரூபாய்தாளை கொடுத்துஅதனைப்பெற்றுக்கொண்டான்.பழைய செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மகனை மீண்டும் ஏற வைத்துக்கொண்டு ஹொஸ்பிட்டல் நோக்கிச் சென்றான்...மாயாவி.

அப்பா எதுகப்பா.....எனக்கு புதுசு பாட்டா...(செருப்பு)...அம்மா எப்பவும்... வேண்டேக்க கொஞ்சம் பெரிசாத்தான் எடுத்துதருவா.அப்பத்தான் வளரவளர போடலாம் என்று......ஆனா இது எனக்கு நல்லம்....எதுக்கப்பா....? நாளைக்கு ஸ்கூலுக்கு போறனா...? அப்...பா......என சயிக்கிள் கான்டிலை அங்குமிங்கும் ஆட்டினான் முன்னுக்கு இருந்தபடி கோபால்...

டேய்.....சும்மாயிருடா....அந்தச்செருப்பு பழசாகிப்போயிட்டுதா......அதுதான்டா எடுத்தேன்..உனக்கு வேணாம்னா சொல்லு கடையில கொடுத்திரலாம்.......

இல்லப்பா......வேணும் எனக்கு....என்று கீழே குனிந்து கால் செருப்பைப் பார்த்துகொண்டான்...சிரித்தான்.....பின்பு கவலையடைந்தான்.......எதுவுமே பேசாது இருந்தான்.....எந்நேரமும் வாய் வலிக்காது பேசிக்கொண்டிருக்கும் கோபால் அமைதியாக இருப்பதை எண்ணி மாயாவி பேச்சுக்கொடுத்தான்.....

என்னப்பா சத்தத்தைக்காணோம்....

ம்.....அப்பா....என்னோட விளையாட வருவாங்களே ரகு, காந்தன்.......அவங்க ஒரே என் செருப்பை எடுத்து ஒளிச்சு வைப்பாங்கப்பா........அதுதான் அவங்களுக்கு காட்டவேணும் என்று யோசிக்கிறன்.....எப்ப காட்டவேன் என்றிருக்ப்பா....அதுதான் இப்ப கவலை....

சிரிக்கிறான் மாயாவி.....ம்.......அம்மாவைப் பார்க்கப்போறோம் ஆஸ்பத்திரி வந்திட்டுது இறங்கப்பா......அங்க சத்தம் ஒன்னும் போடாதே என்ன பேசாம வா....சத்தம் போட்டா வெளியில துரத்திவிடுவாங்க...

இல்லப்பா.......இப்ப விசிட்டர்ஸ் நேரம்தானே.....நாங்க சத்தம் போடலாம்.....

இல்லடா......மற்றாக்களுக்கு தொந்தரவாகிப்போடும்.....அதுதான் பேசாம வா..

ம்...என்றவன்....அடிக்கடி தன் செருப்பைக்குனிந்து பார்த்துக்கொண்டான்....பின்னால் திரும்பியும் அதன் அழகைப் பார்க்கிறான்....டக்கென்று நின்றுவிட்டு ஒரு கையில ஒரு செருப்பைமட்டும் எடுத்து அதன் பின்பக்கம் திருப்பி ஊத்தை படிந்துவிட்டதா என பார்த்தான்..வாயால் ஊ.ஊ என்று ஊதிவிட்ட மீண்டும் காலில் மாட்டுகிறான்...

கோபாலுவின் இந்தச்செய்கை மாயாவிக்கு சிரிப்பை உண்டுபண்ணியது.......சிரித்துக்கொண்டு சொல்லுகிறான்....இது பழுதாய்ப்போனா உனக்கு அப்பா புதுசு வாங்கி தருவேன்....இப்ப வாடா......

கோபாலும் சிரித்துக்கொண்டு போகிறான்......அதோ தெரிகிறது அம்மாவின் வார்ட்டு....கிட்ட வந்தவுடன் ஓடிப்போகிறான்.....போனவன் அங்கிருந்து அப்பாவைப்பார்க்கிறான்...

வாப்பா.....கெதியா வாங்க.....

அமைதியான தூக்கம்....மங்கா.

ஒருதடவை அவளை எட்டத்தில் நின்றே பார்த்த மாயாவியின் கண்கள்....அந்த வார்ட்டில் அட்மிட்டாகயிருந்த அந்த 3 பிள்ளைகளின் தாய் இருந்த இடத்தைப்பார்க்கிறான்.......அங்கே அவள் கணவனுடன் வீட்டிற்குச்செல்ல தயாரிக்கொண்டிருந்தார் மாயாவி....கொஞ்சம் இரண்டடி முன்னுக்கு நடந்தவனாய்.....ஐ...யா.....ஐயா......

என்னங்க உங்களத்தான் அந்தஆள் கூப்பிடுகிறார் போல.....போய் என்னென்டு கேட்டிட்டு வாங்க...

அட ஆமா....ஏதும் உதவி கேட்கப்போறோனோ தெரியல்ல...பாவம் அவனும், அந்தப்பெடியனும் ........என்று கூறிக்கொண்டு அவன் அருகில் சென்றார் அந்தப்பெரியமனிதர்.....

ஈஸ்வரா........இஞ்சவாப்பா.....அழைத்த குரல் கேட்டுத் திரும்பி பார்த்தார் அந்தப்பெரிய மனிதர் ஈஸ்வரன்..என்னம்மா என மெதுவாக 4 விரல்களை உள்மடக்கி பெருவிரலை மட்டும் உயர்த்திக் கேட்டார் ஈஸ்வரன்...

அட இஞ்ச வாப்பா.......கிட்ட வா....ம்.என்றபடி மாயாவியைத்திரும்பிப் பார்க்க...மாயாவி....போங்கய்யா போயிட்டு வாங்க..பெரியம்மா கூப்பிடுறாங்க.....நான் இங்க நிற்கிறன்......போயி பேசிட்டு வாங்கய்யா....

ம்........இருங்க வாறன்.....

என்னம்மா இவ்வளவு நேரமும் இங்கதானே நின்றனான்..........இப்பபோய் கூப்பிடிறீங்களே.......

அட அவசரப்படாதேயடா என்று மெதுவாக அவர் காதருகில் ஏதோ கூறினார் ஈஸ்வரனின் தாயார்.....அதனைக்கேட்ட ஈஸ்வரனின் மனைவி வாசுகியும் மெல்லச்சரித்துக்கொண்டாள்....தூரத்தே நின்று எதுவும் புரியாது மனது ஒருநிலையில்லாது தவித்துக்கொண்டிருந்தான் மாயாவி......

மீண்டும் ஈஸ்வரன் மாயாவி பக்கம்......ம்.சொல்லுங்க.....ஏதாவது உதவி வேணுமா...? இப்ப உங்க மனைவிக்கு எப்படியிருக்கு...? வேறு யாருமே உதவிக்கில்லையா......?

ஒரு தடவை.....மகனைத்திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் அழுதான் மாயாவி....

அடடா ஏன் அழுகிறீங்க.....சொல்லுங்க....நான் ஏதும் உதவி பண்ணனுமா....? இனி நாங்க வரமாட்டோம்......இன்னைக்கு ராத்திரியே நம்ம ஊருக்கு இரத்தினபுரிக்குப்போகிறோம்......இனி உங்கள காணமாட்டோம்......கடவுளை நாங்க குடும்பமா வேண்டிக்கிறோம்.....இப்ப என்ன உதவி நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்க.....கார் வரப்போகுது.........சொல்லிக்கொண்டிருக்கும் போதே....அவருடைய 3 சின்னப்பிள்ளைகளும் அப்பா என்று ஓடி வந்து கையையும் காலையும் கட்டிப்பிடித்தார்கள்......அவர்களோடு கார் டிறைவரும் கூட வந்தார்....

நீங்க சொல்லுங்க....

ஐயா....ஐயா......என்று தோளில போட்டிருந்த துண்டை எடுத்து வாயி்ற்கு கிட்ட வைத்து அழுதான்.தேம்பித்தேம்பி அழுதான் மாயாவி.....அவன் அழுவதைக்கண்டவுடன் கோபால் ஓடி வந்து அப்பா அப்பா என அவனை தட்டித்தட்டி கூப்பிட்டான்.....ஏனப்பா அழுவுறீங்க...

ஐயா.....எனக்கு இவன் ஒரேயொரு பையன்.....அன்னைக்கு அந்த அம்மா கட்டிலுக்கிட்ட இவன் நின்னுட்டு இருந்தப்போ.....அந்தம்மா சொன்னாங்க..............உங்க....ளுக்கு....உதவிக்கு வீட்டு வேலைக்கு சின்னப்பையன் வேணும் என்னு.....

அட ஆமா..ஆமா.....இப்ப கூட என் அம்மா கூப்பிட்டு அதைத்தான் சொன்னாங்க.....ஆமா அதுக்கு...

ஐயா......இவனை கூட்டிட்டுப்போங்கய்யா.....அவன் நல்லா கணக்கு எல்லாம் செய்வான்.....சயிக்கிள் எல்லாம் ஓட்டுவான்......ரொம்ப நல்ல பையன்.......எங்க விளையாடப்போனாலும்..வூட்டுக்கு டைமுக்கு வந்துவானய்யா......என்னோட கடையில கூட வேலை செய்தபழக்கமிருக்கய்யா....ஐயா....என விக்கி விக்கிஅழுதான்...

ஓ......அப்படியா...நாடியில் கைவைத்தார் ஈஸ்வரன்....யோசித்துவிட்டு கோபாலைப்பார்த்தார்.....அவருடைய பிள்ளைகள் அவர்கள் அம்மா இருந்த இடம் போக திரும்பிப்பார்க்கிறார்......இஞ்ச வாப்பா என்று கூப்பிட்டார்....கோபாலை.....

அவனோ.....எல்லாம் புரியாதுவிட்டாலும்....தன்னை தன் அப்பா மாயாவி யாருக்கோ தள்ளிவிடப்போகிறார் என்று மட்டும் உணர்ந்துகொண்டவனாய்...வேணாப்பா......நான் போகமாட்டேன்.....நா மாட்டேன்.....என்று மாயாவியின் கால்களை இறுக்கிப்பிடித்துக்கொண்டு தலையாட்டினான்......

ஈஸ்வரனோ......மாறிமாறி இருவரையும் பார்க்கிறார்.....பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களைக்கடந்து பிள்ளைகளும், தாயும், ஈஸ்வரனின் அம்மாவும், டிறைவர் கைகளில் பைகளையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள்......அப்போது அங்கே வந்த ஈஸ்வரனின் தாயார்......என்னவாம்... என்று கேட்க.....ஈஸ்வரனும் விசயத்தைச்சொல்ல மறுபேச்சுக்கிடமின்றி....அட நல்லதாகிப்போச்சு.....ம்ம்....கூட்டிக்கொண்டு வாற வழியைப்பாரு என்றுவிட்டு முதலில் பேசிக்கொண்டிருக்காம காசைக்கையில வை என்று மெதுவாக மகனிடம் கூறிவிட்டு அவ்விடததை விட்டு நகர்ந்தார்கள்....

கோபால் இந்த ஐயாகூட போங்க ..அப்பா வந்து கூட்டிவருவேன்......என்று மாயாவி சொல்ல.

அவனோ......

வேணாம்ப்பா நான் போகமாட்டேன்......நான் ஒருஇடமும் போகமாட்டேன்....எனக்கு அம்மாவும், நீங்களும் வேணும் யாரும் வேண்டாம் வேணாப்பா......என்னை விடுங்க நான் போகல்ல........நான் ஒண்ணுமே இனி கேட்கமாட்டேன் விளையாடப்போகமாட்டேன்..அடம்பிடிச்சு கத்தமாட்டேன்......என்னை அவங்ககூட அனுப்பாதிங்கப்பா...அப்பா...நான் போகல்ல......எனக்கு நீங்கதான் வேணும்....ப்பா.......அம்மா........அம்.........அம்மா.......

அழுதான்......பணக்கஷ்டத்தின் கொடுமையில் தவிக்கும் மாயாவி......மகனை அடக்கு வைக்கத்துணிந்தான்.....அவன் எடுத்த எந்த முயற்சியும் அவனுக்கு இடமளிக்கவில்லை.....ஏழையின் பாரம் இறங்க......இறைவன் வழிவகுக்கவில்லை.....எதற்கும் ஆசைப்படாத மனசு இன்று காலத்தின் கொடுமையில் ஒரு உயிரை விலைபேசுகிறது.....பார்ப்போர் நெஞ்சை உருக்கி கசக்கிப்பிழியும் காட்சியது.....இனி தாமத்தால் எங்கே கைநழுவிப்போய் விடுமோ என சிந்தித்தவாறு ஈஸ்வரன்......மடமடவென பொக்கட்டினுள் கையை விட்டு ரூபா.......1500.00 எடுத்து மாயாவியின் கைகளில் வைத்தான்..
மாசாமாசம் உங்களுக்கு பணம் கிடைக்க வழி பண்ணுறன்........உங்க வீட்டு விலாசம்....

பையனுக்குத் தெரியுமய்யா....என ஐயா என.....பணத்தையும் வாங்கிக்கொண்டு காலில் விழுக்கிறான்.....,ஈஸ்வரனின் பாதங்களை கண்ணீர் கொண்டு கழுவுகிறான்.....

மாயாவியைத் தொடமலே எழும்புங்க.இது என்ன வேலை.......எழும்புங்க.....சொல்லுறன்.எழும்புகிறான்.....மாயாவி அழுகிறான்...

கோபாலோ... நிலத்திலே குந்தியிருந்து கண்களைப்பொத்திக்கொண்டு அழுகிறான்....அவன் மனசுக்கு கடவுளை எல்லாம் கேள்வி கேட்த்தெரியவில்லை...அம்மா....அம்மா என்று மட்டுமே திரும்பத்திரும்பத் சொல்லி அழுதான்....

மாயாவி அவன் தோள்களைப்பிடித்து தூக்கிஎழும்பவைத்தான்......அவன் மூக்கால் வழியும் மூக்கு நீரை தன் தோள் துண்டுகொண்டு துடைத்துவிட்டு.......என்ர ராசா........கோபாலு....இந்த ஐயா ரொம்ப நல்லவரய்யா.....உன்னை நல்லா வச்சு பார்ப்பாங்க.இப்ப அம்மாக்கு உடம்பக்கு முடியல்ல....வாற மாசம் உன்னை இங்க கூட்டிவருவேன்.ஒவ்வொரு மாசமும் நான் கூட்டிவருவேனப்பா.......அழுவாதேடா...

அழுகிறான்.....போ.....என்னோட பேசாதிங்க.....என்.அம்.மா...அம்மா வேணும்.......நீங்க நல்லமில்ல போங்கோ...எனறு அப்பாவை தள்ளிவிட்டு மீண்டும் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதான்.....அந்த இடத்தில இருந்தால் எங்கே மனம் மாறிவிடுமோ என எண்ணியவாறு ஈஸ்வரனும் கோபாலை கையால் கிட்டப்போய் தொட்டு அவன் ஒரு கையை பிடித்தார்......நிமிர்ந்து பார்த்தான்...ஈஸ்வரனின் பிடியில் கை தளர்த்திக்கொண்டு மீண்டும் மாயாவிடம் அப்.....பா நான் போகமாட்டேன்......அவங்கள போகச்சொல்லுங்க....நான் போக மாட்டேன்....

இரு மனங்களின் வேதனைகள்.......உடல் மட்டுமிருக்க உயிருக்காகப்போராடும் இன்னுமொரு அவலநிலையில் மங்கா.....இவர்களுக்கடையில் தேடிவந்த வேலை சுலபமாகிவிட்டநினைப்பில் ஈஸ்வரன்......

இனியும் தாமதித்தால் நல்லதல்ல என்றபடி....வேறு என்ன..இந்தாப்பா இதுதான் என்னோட அட்ரஸ்......இரத்தினபுரியில கடை வச்சிருக்கேன்....வீட்டு வேலைக்கு கடைக்கு அங்க இங்க போக கை உதவிக்கு ஒரு பையன் தேவை என்றிருந்தேன்......சரி என்ன செய்வது.......கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரி அளந்துவைக்கல்லையே.....

சரி நான் இவனையும் கூட்டிட்டுப்போறன்.......

இந்தாங்கய்யா.....இதில அவனோட உடுப்புகளிருக்கய்யா....நான் பணம் சேர்ந்ததும் பையனை கூட்டிவரவருவேனய்யா......

சரி அதை அவனிட்டையே குடப்பா.......சாமியை வேண்டிக்கிறன்.....அவங்க அம்மா சுகம்பெற....

அழுதான் கோபால்.....அம்.மா.அம்மாவைப்பார்க்கவேணும்......யாருமே அவன் பேச்சுக்கு இடமளிக்கவில்லை.மனமிரங்கவில்லை.......மாயாவி பாவம் என்ன செய்வான்.....அழுகிறான்.ஐயோ.....நான் பாவம் செய்கிறேனே என்று அழுதான்.......மகனை கட்டிப்பிடித்து கண்களைத் துடைத்துவிட்டு முத்தமிடுகிறான்...தலையைத்தடவிவிடுகிறான்...மீண்டும் ஈஸ்வரன் கையில கொடுக்கிறான் கோபாலை...மயாவி.

தொடரும்....
----------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.thamilworld.com

Friday, November 14, 2008

மனசாட்சி.....7

மங்காவின் நிலையைப்பார்த்ததும், மாயாவிக்கு கவலைஅதிகமாகியது..நா வறண்டது போல உணர்வில் வார்த்தை வெளி வராது.....மெல்லத்திரண்டு தொண்டைக்குள் அடைத்து வந்த சோக உருண்டைகளை எச்சில் இட்டு விழுங்கினான்....மாயாவியின் கை பட்ட உஷ்ணத்தினால் மங்காவும் மெல்ல மெல்ல இமைகளை விரித்தாள், கண்ணெதிரே மாயாவி மங்கலாகத் தெரிந்தான்.....

அவள் கண்கள் கலங்கி நீர் வழிந்து, அவள் உடல்வெப்பத்தால் தடையங்களாக அப்படியேயிருக்க......மங்காவின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் எனத் தன் மனத்திற்கு ஆணிகொண்டு அறைந்தவேதனையை உணர்ந்தான். எதுவுமே பேசாது......இருந்தவனை.....கையை மெதுவாக அசைத்து உயர்த்தி மகனைக்கேட்டாள் மங்கா...

இருக்கிறான்.....ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருக்கேன்....

தேய்பிறையானாலும் நிலவிலும் ஒளியிருப்பதுபோல மங்கா மெல்லச்சிரித்தாள்.....தனக்கு பொய் சொல்லுகிறார் மாயாவி என்றதை நன்றாக உணர்ந்து கொண்டாள்....தன் நாக்கினால் அடிக்கடி உதட்டை நனைத்துக்கொண்டாள்.....அவளுதடு காய்ந்து வெள்ளைத்தோலுரிந்தது போலயிருந்தது....பார்க்கவே பரிதாபமான காட்சியது...

இனியும் அங்கிருக்காமல்.....தான் திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறுகிறான்....மாயாவி.

என்ன தம்பி அவங்க உடல்நிலை எப்படியிருக்கு...? இங்க வச்சிருக்காம டவுண் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போங்க.....எப்படியும் அங்க மருந்துவசதிகள் இருக்கும்.....ஆனா போக 300, 400 ஆவது செலவாகும்.....ம்....சரியிங்க என்று இடைமறித்து அறுதல்கூறியவருக்கு தலையாட்டி நன்றி கூறிவிட்டு கோபாலிடம் செல்ல.அப்பா வருவதைக்கண்டு அவனே எழுந்து ஓடிவர....

அப்பா அம்மாவை நான் பார்க்கல்ல.....நான் போயி பார்த்திட்டு வாறன்......நேற்றும் நான் பார்க்கல்ல...இன்னைக்கும் பார்க்கல்ல.....நான் அம்மாவைப்பாத்திட்டு வாறனப்பா.....விடுங்க கையை...

மாயாவியின் கைப்பிடியிலிருந்து உதறியடித்தபடி ஓடிப்போய் மங்காவின் தனிப்பட்ட திரையை விலத்திக்கொண்டு உள் நுழைந்தான் கோபால்........

அவசரமாக ஓடிச்சென்ற தாதியும், மாயாவியும் அவனை பிடித்திழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.....என்னப்பா பையனை வளர்த்து வச்சிருக்கிறாய்......இந்த மாதிரி முரண்டு பிடிக்கிறானே.......என்ர பிள்ளையாயிருக்கட்டும் இன்னேரம் நாலு அறைவிட்டிருப்பேன்.....ஒரு சொல்லு பேச்சு கேட்காத பையனாயிருக்கான்....

சிலபேர் சும்மாயிருந்தாலும், எரிகிற நெருப்பில எண்ணெய் ஊத்துகிற மொழி போல நேர்சின் பேச்சு.......இதைக்கேட்ட மாயாவிக்கும் கடுப்பேறியது..சளார் என அவன் கன்னத்தைப்பொத்தி ஒரு அறை.....

அதைப்பாராட்டி அப்படிச் சாத்தவேணும்.என்ற நேர்சின் சபாஷ்....இத்தனைக்கும் நடுவில்...

அம்மா.......எனக் கதறித்துடித்து முகத்தை இரண்டுகைகளாலும் பொத்தி கீழே குந்தியிருந்து அழுதான் கோபால்....அந்த வைத்திய பிரிவு எல்லோரையும் சற்று திரும்பி பார்க்கவைத்தது அந்தக்காட்சி.....ஏன் மங்காவின் காதிலும் அந்தக்குரல் ஒலித்தது....ஆனால் அவளால் எதுவும் பேசமுடியாது கண்களைத்திறந்து மூடும் போது வழிந்தோடும் கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது...

அறைந்தபின்புதான் மாயாவிக்கு அடச்சே....என்ன காரியம் செய்துட்டன்.பாவம் புள்ள.அப்படி என்னத்தக்கேட்டுப்புட்டான்......எத்தனை ஆசைகளை தனக்குள்ளே புதைச்சு வச்சு.ஒருநாளாவது அந்தப்பிள்ளைங்க மாதிரி தனக்கு அதுவேணும் இது வேணும் என்று கேட்டிருப்பானா இவன்...அட நான் ஏன் இப்ப மிருகம்போல ஆகுறன்.....கடவுளே என்னப்பா உன் சோதனை.....

வாய்யா.......நாம போவோம்.....

போ நான் வரமாட்டன் போ......

அட வாப்பா.....அப்பாதானே அடிச்சன்.....வாப்பா........கோபாலு நான் பிள்ளைக்கு ஐஸ்பழம் வாங்கித்தாறன் வாப்பா.....எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்கப்பா......

நான் வரல்ல நீங்க போங்கோ.....அடம்பிடிக்கிறான் மீண்டும்.......இவனை இப்படியே விட்டிட்டும் போகமுடியாது....அதனால மாயாவியும் எவ்வளவோ நேர கெஞ்சல்களுக்குப்பின்பு ஒருவாறு தன் அழுகையின் குரலை தாழ்த்திக்கொண்டான்.....இப்போது கூட அவன் சமாதானம் அடைந்ததெல்லாம் பல மாதங்களின் பின்பு ஐஸ்பழம் குடிக்கும் ஆசையில்...

சொன்னபடியே வாங்கிக்கொடுத்தே கோபாலுவையும் கூட்டிக்கொண்டு சாயந்தரம் 4 மணிக்கெல்லாம் கந்தவர்மன் ஐயா வீட்டிற்கச்சென்றான்.....வீட்டுவாசலை கூட்டிக்கொண்டு இருந்த மகேஸ்வரி அம்மாவைக்கண்டவுடன்......

அம்மா.......நான் மாயாவியம்மா....

குரல்கேட்டு...உள் கொழுக்கி போட்டிருந்த கேட்டைத்திறந்து கொண்டு வா மாயாவி வா........என்னப்பா பிரச்சனை...? கொஞ்சம் சொல்லன்.....என்னெண்டுதான் கேட்டுப்பார்ப்போமே...பிறர் கதை கேட்கும் ஆவலில்.....

தன்மனைவி மங்கா கடந்த 5 நாட்களாக படுத்தபடுக்கையாக இருப்பதும், அதற்குரிய வைத்திய செலவிற்கு பணமாக ரூபா 900 அவசரமாகத்தேவைப்படுவதையும் கண் கலங்க உள்ளத்து வேதனையோடு சொல்லிமுடித்தான்....

அம்மா அதற்காகத்தான் ஐயா வரமுதலே இங்க வந்திருக்கிறன்...

ம்..அட நீ என்னப்பா....மக்கு பயனாட்டம்.....அந்த மனுசனிட்ட காசு கறப்பதென்றால் கல்லுல நாருரிக்கிறதுபோல.......நான் நினைக்கல்ல மனுசன் தரும் என்று......பொறு வாறன் என்ற மகேஸ்வரிஅம்மா உள்ளே சென்று ரூபா 100 தாளுடன் திரும்பி வந்தார்.

இந்தாப்பா யானைப்பசிக்கு சோளப்பொரி என்று நினைக்காம இதை வாங்கிக்கோ.....அவரைப்பார்த்து நேரத்தை வீணாக்காம வேறு யாரிட்டையாச்சும் கேட்டுப்பார்....நீ தேங்காய் பறிச்சுக்கொடுக்கிற ஜீவா மாஸ்டரிட்டையும் கேட்டுப்பார்....யாருமே 900 தரமாட்டாங்க......உலகம் அப்படிக்கிடக்கு......கூட இருக்கிற உறவுகளே கும்மாளம் கொட்டிட்டு அங்கால போனப்புறம் கஷ்டமோ, நஷ்டமோ வந்தாக்கூட திரும்பியும் பார்க்கமாட்டாங்கப்பா.....இதுதான் இன்றைய உலகம்.....

அம்மா...நான் அப்படியில்லம்மா......நாங்க சாகுறவரைக்கும் நாயா இங்கேயே காலம் பூராவும் உங்க காலடியில கிடப்போம்....நம்புங்க அம்மா.....இந்தப்பிள்ளையப்பாருங்கம்மா......எங்க இவன் அவன் அம்மாவை இழந்திருவானோ என்று ...

சே.சே...அப்படி எதுவும் நடக்காது......நீ யாருக்கும் அநியாயம் செய்யாதனீ. ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.....வீணாக மனதைக் குழப்பாமல் போய் ஆகவேண்டியதைப்பாரப்பா........

அம்மா மங்கேஸ்வரி கொடுத்த 100 ரூபாவையும் கும்புடு போட்டு வாங்கி மடித்து தன் பாக்கெட்டினுள் வைத்துக்கொண்டு........மகனையும் கூட்டிக்கொண்டு நேரே தன் வீட்டிற்குப்போனான்.....இனியும் யாரையும் கேட்டுப்பலனில்லை........டவுணில இருக்கும் வைத்தியசாலைக்கு மங்காவைகூட்டிச்செல்லும் அளவிற்கு அவனிடம் பணமும் இல்லை....என்ன நினைத்தானோ என்னவோ.....வீட்டிற்குள் சென்றவன்......கோபாலுவின் பாடசாலை பையினுள் அவன் உடுப்புகளை அள்ளி திணித்தான்.......என்ன எண்ணிப்பார்த்தால்.....3 நல்ல உடுப்புகளுக்கும் அதிகமிருக்காது......

மாயாவி அடித்த தழும்பு இன்னும் கன்னத்தில் விரலாக பதிவாகயிருந்தது......எதையும் அறியாது இன்னும் குடிச்சு முடிந்த ஈர ஐஸ்பழக்குச்சியை சப்பிக்கொண்டு இருந்தான் கோபால்.....

கோபாலு.......போயி.......போயி....அம்மம்மாக்கு சொல்லிட்டுவா ராசா....

ஏனப்பா.நாங்க எங்க போறம்...?

நான் சொல்லுறன்......முதல்ல அந்தப்பெரியவங்களுக்கு சொல்லிட்டு வாப்பா.....அவசரத்திற்கு அந்த அம்மா உனக்கு ஊட்டி வளர்த்தவங்க....அதை நாம மறக்கக் கூடாதுப்பா.....சொந்த உறவாக இல்லாவிட்டாலும், அதுக்கும் மேலாக அந்தக்காலணியில அவங்களும்...

சரிப்பா........ஆனா சொல்லுங்க.....நாங்க எங்க போறோம்...?

எல்லாம் சொல்லுறன் நீபோய் சொல்லிட்டு வா.....

அவங்க அம்மம்மா கேட்டா என்ன நான் சொல்ல....?

தூரப்போறன்.....திரும்பி அம்மாகூட வருவேன் என்றதை மட்டும் சொல்லு....

ம்..சரிப்பா.....

திரும்பி வந்த கோபாலுவுடன் மீண்டும் பெரியாஸ்பத்திரி நோக்கி அவன் சயிக்கிள் மிதித்தது....

தொடரும்......(வாழ்க்கைக்கு வழி)


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.