Friday, February 13, 2009

மனசாட்சி...13

உலகம் எவ்வளவு வேகமானது. அன்றைய காலகட்டத்தில் தலை குனிந்து பக்கம், பக்கமாக பத்திரிகை புரட்டி வாசித்த காலம் குறுகிப்போய் விரலின் நுனியில் உலகத்தின் வியப்புக்களை வீட்டினில் இருந்து தலை நிமிர்ந்து பார்த்து வாழும் இக்கால கட்டத்தில்..

கோபாலுவின் வாழ்வும் புயலும், சுறாவளியும் அடித்து ஓய்ந்து போன கதைபோல் அவன் தாய் இறந்த செய்தி கேட்டு அதற்காக தன்னை நொந்துகொண்டு ஆதரவற்ற அனாதைபோல் தனிமையை உணர்ந்து அதிலிருந்து மீண்டு, மீண்டும் தந்தையை வெறுத்து தாயை வணங்கி, வழமைபோல தன் அன்றாட கடமைகளில் கவனம் செலுத்தி வந்தவனுக்கு..

காலம் மாறமாற அவன் கதையும் மாறியது. அதிக காலம் அவன் படிப்பு தொடரவில்லை. அவனின் உதவியின்றி யாராலும் எதுவுமே செய்ய முடியாது போக அவன் படிப்பும் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்கு மிக முக்கியமான ஆலோசகராக பாட்டியும் முக்கிய காரணம்.தான் நடமாட முடியாது போக கோபாலை வேறு எங்குமே செல்ல தடையாகயிருந்தார்.

பருவ வயது.....வயது ஏறஏற அவனுக்கு வீட்டின் முன் முற்றம் கூட்டுவது பிடிக்காது போனது. பாடசாலைக்குச் செல்லும் கன்னிப்பெண்களின் கிண்டல்களுக்கு ஆளாகினான். அதனால் அதிகாலையிலேயே எழுந்து சென்று முற்றம் கூட்டி தன் கடமைகளை சரிவரச்செய்தான். அன்றும் அவன் அதிகாலை அவ்வாறு எழும்பி முற்றம் கூட்டும் போது அதிகாலை மலராக அவள் தென்பட்டாள்.

யார் அவள்...? தினமும் அதே வீதியால் காலையில் பூத்துக்கொண்டு போகும் அதே பெண். இன்று அவனுள் ஒரு மாற்றம். மங்களமான அதிகாலை, தென்னங்கிளிகளின் கீச்...கீச் இசையோடு, காகங்களின் உறவுகளை அழைக்கும் காக்கா சத்தம், அடுத்த வீட்டின் முற்றத்தில் யாரோ தண்ணீர் தெளிக்கும் சத்தம், இத்தனைக்கும் மத்தியில்.. ஆதவனின் வெளிச்சத்தில் மஞ்சள் நிறத்துடையாள் மெளனமாய் மதில் ஓரம் வழிந்து தெருவோரம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த செவ்வரத்தம் பூக்களை எட்டி எட்டி ஒரு கூடையை கையில் வைத்துக்கொண்டு ஆய்ந்துகொண்டிருந்தாள்.

விளக்குமாறுடன் வீதிக்கு வந்தவன் சட்டென்று அதனை ஒளித்துவைத்துவிட்டு பின்வாங்கி...அவளைக்கண்டும் காணாதது போல தலையைக்குனிந்தவாறு.....கேட்டை சற்று திறந்து வைத்துக்கொண்டு எப்படி எதைக் கையிலெடுத்துக்கொண்டு முன்னுக்குச் செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். அதற்கிடையில் அவன் மூச்சு வாங்கியது. ஒருபோதும் இல்லாத மின்சார காந்த உணர்வில் கண்கள் சிவந்து கொண்டன. தான் அணிந்திருக்கும் மேல் உடுப்பை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டான். கை விரல்களினால் தலையை வாரிக்கொண்டான். மனதோ படக்படக் என்று அடிக்க....கேட்டை மீண்டும் திறப்பது போல வெளியில் சென்றான். அப்போதும் அவன் கண்கள் யாராவது பார்த்துக்கொண்டால் நிலமை என்னாவது என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்தான்....ஒருபோதும் இப்படி அவனை எதையுமே சிந்தித்ததில்லை. இன்று அவள் பார்வை படவே அவனுள் இந்த மாற்றம்...

அப்போதுதான் கவனித்ததாக பொய்யான பார்வையை அவள் மீது இமைகளை உயர்த்தி பார்த்தான்....உள்ளுக்குள் புன்னகை. உதட்டினில் சாந்தம். அவள் ஒரு கையிலே கை கூடையை கோர்த்துக்கொண்டு எட்டி எட்டிப் பறிக்கும் அழகை ரசித்துக்கொண்டு.....வேறு பூக்கள் வேணுமா....வீட்டு முற்றத்தினுள் இருக்கு கொண்டுவரவா என்றான்...தயங்கித் தயங்கி கேட்டான்...

அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....யெஸ் ப்ளீஸ்....

பூத்தும் பூக்காததும் போல இருந்த பூக்களை அதுவும் அவன் மனக்காதல் போல் நிறைய பிடுங்கினான். மிக அவசரவசரமாக அந்தக்கூடை நிறைய பல வர்ண பூக்களால் அலங்கரித்து அவள் கையிலே அவன் கொடுக்க அதனை தாங்ஸ் என்று அவள் வாங்கிக் கொள்ளவும் முதல் முறையாக இருவருள்ளும் மனசுகள் இடம்மாறிக்கொண்டன.

ஏதாவது விசேசமா..? அவனாகக் கேட்டான்..

இப்ப எங்கட ஸ்கூலில நவராத்திரி விழா நடக்குது. ஒவ்வொரு நாளும் பூக்கள் கொண்டு போகவேணும். ஏன் உங்கட ஸ்கூலில இல்லையா..? டப்டப்பென்று பேசினாள்.

இதுபோல் ஒரு போதும் யாருடனும் பேசாத கோபால், எந்தப்பெண்ணும் அவனுடன் பேசாத நிலையில் முதன்முதலில் அவள் வார்த்தையில் தடுமாறினான். மறு வார்தை பதில் சொல்லமுடியாத குழப்பத்தில் நாணிக்குறுகி நின்றான்.

சொல்லுங்க உங்க ஸ்கூலில சரஸ்வதி பூஜை இல்லையா....

மீண்டும் அவள் கேள்வி....பதில் சொல்லுவதற்கிடையில் அவன் இருதயம் தண்டவாளத்து ரயில்போல 100 கிலோ மீற்றர் வேகத்தில் படபடத்தது போய்க்கொண்டிருந்தது.

இதற்கு என்ன பதில் சொல்லுவது 15 வயதுச்சிறுவன், பாடசாலை போகவில்லை என்றதை சொன்னால் அவமானமாகயிருக்கும் என்று எண்ணி...அங்கேயும் நடக்குது என்றான்...

மீண்டும் அவள் தாங்கியூ என்று சொல்லிக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.அவள் அருகில் இருந்த போது எல்லா பூந்தோட்டங்கள் அவள் மட்டும்என்றே அவனுக்கு இருந்தது. அவள் செல்லச்செல்ல அவன் மனது பாலைவனம் போல இருந்தது.
அன்று அவன் எந்த வேலை செய்தாலும் பலதடவை சரிபார்த்துக்கொண்டான். தான் அதனை செய்தேனா, இதனைச்செய்து விட்டேனா என்று மீண்டும் மீண்டும் வேலை செய்தான். அவன் மனது அவனிடத்தில் இல்லை. அடிக்கடி அந்த மஞ்சள் நிற தேவதை அவன் கண்ணுக்குள் நிறைய பூக்களின் நடுவே மலர்ந்து மலர்ந்து மணம் பரவிக்கொண்டிருந்தாள். பல தடவை வீதிக்குச் சென்று பார்த்தான். அவள் வருவாளா...வருவாளா என ஏங்கினான். பூ மரங்களில் இருந்த மொட்டுக்களைப்பார்த்து வேண்டிக்கொண்டான்.....நாளையும் பூத்து என் மனநாயகிக்கு உதவுங்கள் என்றான். அவனுள் ஏற்பட்ட மாற்றம் நாளைடைவில் வாசுகிக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது. ஏதோ விபரீதமாக அவன் செய்கைகள் காணப்படுவதுபோல அவதானித்தாள். கடைக்குப்போவதாகயிருந்தாலும் பல தடவை கண்ணாடி முன்னின்று தன்னை அழங்கரித்தே போவான் கோபால்......

சந்திப்புக்கள் தொடர்ந்தன...மலர்கள் பறிக்க வந்த மங்கை இப்போது இவன் மனதையும் பறித்துவிட்டாள். நவராத்திரியும் முடிந்தது. அந்த 9 நாட்களும் இவனுள் ஆய கலைகள் 64 ம் உள்ளம் முழுக்க பரவியிருந்தது. அவளும் தினமும் வருவாள். அவள் முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு வந்திருந்ததைக்கண்டான். மறு நாள் அவனுக்கும் வந்திருப்பதைக் கண்டான். தனக்குள் சிரித்துக்கொண்டான். காதலை சொல்லாமல் கன்னங்கள் சொல்லியது.

அவள் பெயரை கேட்டு அறிந்தவன்...அடிக்கடி தன் உள்ளங்கையில் அவள் பெயரையும் தன் பெயரையும் எழுதினான்....மதுமிதா, கோபால் என்று எழுதினான். அவளுள்ளும் அதே எண்ணங்கள். அடுத்த தெருவில் அவள் இருப்பதையும் அறிந்த அவன் அடிக்கடி அவளைக்காண அந்த வீதியால் சுற்றிப்போய் கடைக்குப்போய் வருவான். இருவருள்ளும் பார்வைகளும் அன்பான நலம் விசாரிப்புகளும் வார்ததைகளில்லாமல் வெறும் புன்னகையினால் மட்டுமே காதலாக வளருகிறது.

நிலைக்குமா...? நீடிக்குமா..?
அடரும்..

-----------------
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8929&hl=
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி...12

நாட்கள் வெகுவரைவாக செல்லத்தொடங்கின...கோபாலுவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அந்த வீட்டில் வளரத்தொடங்கினான். காலையில் தினமும் முற்றம் கூட்டும் போது பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததை, வாசுகி கவனித்துக்கொண்டாள். அதன் பயனாக ஈஸ்வரனிடம் சொல்லி கோபாலை பின்னேரங்களில் அயலிலுள்ள ஒரு வீட்டில் டியூசனுக்கு அனுப்ப முடிவுசெய்து கொண்டார்கள். கோபாலுவிற்கும் அது பெரிய சந்தோசத்தைக்கொடுத்தது. தினமும் தன் வேலைகளை முடித்துக்கொண்டு படிக்கப்போவதற்கு ஆர்வமாக தன்னை தயார் படுத்திக்கொண்டான்.
அதன் பயனாக தன் அம்மாவிற்கு ஓர் கடிதம் எழுதினான்...
அன்புள்ள அம்மாவிற்கு..உங்கள் அன்பு மகன் கோபால் எழுதிக்கொள்வது. நீங்களும், அப்பாவும் நலமாகயிருப்பதாக எண்ணுகிறேன்.
அம்மா நான் இங்கு வந்த நாட்தொடக்கம் நன்றாக இருக்கிறேன். உங்களைள விட்டுப்பிரிந்த துயரம் மட்டும்தான் அடிக்கடி என்னை வாட்டும். மற்றப்படி நான் எல்லோருக்கும் அன்பான கோபாலாக நடக்கிறேன். இப்பொழுது என்னை பின்நேரத்தில் டியூசனுக்கும் வாசுகியம்மா அனுப்பி படிக்கவைக்கிறாங்க...ரொம்ப பெரிய ஆளாக வந்ததும் உங்களை நான் என்கூட வைத்திருப்பேன். ஏம்மா நீங்க கூட என்னைப் பார்க்க வரவில்லை...? இங்கு வருவதானால் நிறைய பணம் செலவாகும். இப்ப வேண்டாம். நான் பணம் அனுப்பி வைத்ததும் வாருங்கள். அப்பாவும் பாவம் உதவிக்கு யாருமின்றி தனியாக கஸ்டப்படுவார் என்று நினைக்கிறேன். நான் எழுதும் அட்ரசுக்கு பதில் போடுங்கள்.
இப்படிக்கு உங்கள் நினைவால் வாழும்.
அன்புமகன் கோபால்.
கடித்ததை எழுதிமுடித்ததும் அதனை போஸ்ட் செய்வதற்கு வாசுகியிடம் கொடுத்தான் கோபால்...வாசுகியும் அதனை வேண்டி பார்த்துவிட்டு ம்.கெட்டிக்காரன்...உன் எழுத்துகூட முத்துமுத்தாக அழகாகயிருக்கு.நாளைக்கே ஐயாட்ட கொடுத்து போஸ்ட் பண்ணி விடுகிறேன் சரியா....
கோபால்...சின்ன பாப்பா ஒரே அழுகிறாள் கொஞ்சநேரம் வெளியில கூட்டிட்டு போய்வாப்பா.... டினர் செய்யவிடுகிறாளில்லை. ம்...இந்த மாமியிருந்தாலாவது கொஞ்சம் உதவியாகயிருக்கும்..
அம்மா பாட்டி எப்ப வருவாங்க.....
யாருக்கப்பா தெரியும்..அவங்க.சகோதரியாம் சொந்தம் விட்டுப்போகக்கூடாதென்று போயிருக்காங்க...அங்க ஏதாச்சும் சின்ன வாய்ச்சண்டை ஆரம்பிச்சதும் ஓடிவருவாங்க....
சிரித்துக்கொண்டு சொன்ன வாசுகி அடுப்படி நோக்கிப் போனாள்.
வெளியில் காரின் சத்தம்' கேட்கவே கோபால், சின்னபாப்பாவுடன்,ஓடிப்போய் கேட்டைத் திறந்துகொண்டான் ...சிரித்துக்கொண்டுவரும் ஈஸ்வரனின் முகம் வாட்டமாகக் காணப்பட்டது...கோபாலைக்கண்டதும்....சின்ன பாப்பாவை கையில் வாங்கி கொண்டு என்ர செல்லம்...அழவேணாம்....அழக்கூடாது அப்பா வந்திட்டன்...என்ற படி உள்ளே போனார்.கோபாலுவும் அவர் பின்னால போக கோபால்.....இனி இரவு நேரம் பிளாக்கியைப் போய் அவிழ்த்துவிட்டிட்டுவா...
சரிங்க ஐயா......என்று நாய்க்கூடு நோக்கி பிளாக்கி....என்று கூப்பிட்டபடி பின்பக்கம் போனான் கோபால்...
வாசுகி....
என்னங்க நேரத்தோட வந்திட்டிங்க....
இன்றைக்கு கடைக்கு பாண்டியன் என்று ஒருத்தர் வந்தார்....
யாரங்க அவரு.....
கோபாலுவின் அம்மா இறந்திட்டாங்களாம்...
அச்சச்சோ.........அடக்கடவுளே..இன்னைக்குத்தான் அவன் தன் அம்மாக்கு என்று கடிதம் எழுதித்தந்தவன்....பாவம்........இப்ப அவனை அனுப்பிவைக்கவேணுமே..
வேண்டாம்....அவரே சொல்லிட்டுப்போகிறார். அங்க எல்லா காரியங்களும் முடிந்துவிட்டதாம்...இனி இவன் அங்கு போனாலும் அவன் அப்பாகூட சேரமாட்டான்...ஆனா பாவம் அந்த மனுசன்தான்....எல்லா பக்கத்தாலும் வேதனையைத்தாங்கிக்கொண்டு வாழ்கிறார். இப்ப இவனுக்கு எப்படிச் சொல்லுவதென்றுதான் எனக்குத் தெரியல்ல..
ஏனங்க........அந்த அண்ணனை இங்க கூட்டிவந்து அவர் வாயால சொல்ல வச்சிருக்கலாமே....
ம்..நானும் அப்படி நினைச்சு அவரிட்ட கேட்டேன்.அவரோ மாட்டேன் என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார். தன்னைக்கண்டால் எப்படியும் தன் கூட வரப்போகிறேன் என்று அழுவான் என்று...
ஓமங்க.அதுவும் சரிதான் இப்ப நாங்க என்னதான் செய்யிறது...
இப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் இப்போதைக்கு அவன்கிட்ட ஒன்றுமே சொல்லவேண்டாம். அவன் படிப்பு குழம்பிவிடும். அதுமட்டுமல்ல அவன் ஏற்கனவே நொந்து போயிருக்கிறான்...நாங்க மிருகத்தனமாக நடக்கக்கூடாது...எங்களிட்டையும் பிள்ளைகள் இருக்கு.நாங்க செய்கிற நன்மை தீமைகள்தான் நாளைக்கு எங்கட பிள்ளைகளுக்கு வந்துசேரும்.அவனை நல்லா கவனியுங்க.பாவம் ஏழைகள் வயிற்றிலஅடிக்கக்கூடாது....நீங்க காட்டுற அன்பால அவனாக தாயின் பிரிவை அறிந்தாலும் தாங்கிற சக்திகிடைக்கவேணும்...இனிமேல் அவனுக்கு மாதம் மாதம் பாங்கில காசு போட்டுக்கொண்டு வரப்போகிறேன். அவன் இளைஞனாகியதும் அவன் சொந்த தொழில் செய்ய நாம வழிகாட்டியாகயிருக்கவேணும். எப்பவும்போல அவனிடத்தில அன்பாயிருங்க...சமயம் வரும்போது நானே சொல்லிடிறன். என் அம்மா வீட்டில இல்லாதது எனக்கு என்னவோ போலயிருக்கு....அவனோ சின்னப்பிள்ள...தாயின்ர பிரிவு மிகவும் பாதிக்கும்.
இந்தக்கடிதத்தை என்னங்க செய்யிறது. அதை போஸ்ட் பண்ணுவம். ஏதாவது பதில் அவன் அப்பாகிட்ட இருந்து வந்தா பார்ப்போம்.
உள்ளவங்களையே திரும்பிப் பார்க்காத உலகத்தில், எங்கையோ, பிறந்து இங்க வந்திருக்கும் கோபாலைப்போன்றோருக்கு அன்பு காட்ட, கருணை காட்ட மனிதருள் தெய்வங்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன..
அன்றிலிருந்து கோபால் அந்த வீட்டுப்பிள்ளையாக வளர்ந்தான்...மிகவும் சந்தோசமாக வாழ்ந்துகொண்டுவருகிறான். காலத்தின் மாற்றங்கள் அவன் பருவத்திலும் மாற்றம் காணப்பட்டது.
தொடரும்...
________________________________

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8782&hl=

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி.....11

என்னப்பா நாம எல்லாம் இருக்கோம் என்றாவது நினைச்சியா...இப்ப இப்படி அநியாயமாக சாகடிச்சிட்டியே......நீ நல்லாவா இருப்ப...

ஏன்டா மாயாவி உனக்கு என்ன பைத்தியமா பெத்த பிள்ளையை யாராச்சும் பணத்திற்காக அடைகு வைப்பாங்களா...? இப்ப அவன் ஆத்தா செத்துப்போய்கிடக்கு கடைசியா ஒரு தடவை தாய்ன்ர முகம் பார்க்கவேண்டாமா...சொல்லுப்பா...

இவன் ஒரே குடிதான்....அந்த ஒத்தபிள்ள கோபாலுவைவேறு அனுப்பிவச்சிட்டு அவங்க கொடுத்த காசில அன்னைக்கு ராத்திரி பூரா ஒரே குடிதான்......குடிச்சட்டு கம்முண்ணு கிடந்தானா....மத்தவங்களையும் தூங்க விடாம ஒரே ரகள...(கதை கட்டி ஊரை நம்ம வைக்கும் கூட்டத்தில் இவளும் ஒருத்தி..)

இவன் பணத்திற்காக எதைவேணுமானாலும் செய்யக்கூடிய ஆளப்பா..இந்தஏரியாவில நல்ல மனுசனாட்டம் நடமாடிட்டு இப்பதான் உண்மைதெரியுது....

ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுக்கொண்டு இருந்தார்கள்.....மங்காவிற்கு டொக்டரின் ஆலோசனைப்படி ஊசி மருந்துகள் கொடுத்தும் அவை வேலைசெய்யவில்லை. தாமதாக உசிமருந்து கிடைத்தபடியால அவள் இறைவனடி சேர்ந்தாள்.

நோய்வாய்ப்பட்டமையால் இயற்கை மரணம் என மரண அத்தாட்சிப்பத்திரம் எழுதியபின்பு உடனே அடக்கம் செய்யவும் ஏற்பாடு நடைபெற்றது.....

ஏதோ காரியம் ஆனால் சரி என்பது போல அயலவர்கள் கூடிநின்று மங்காவின் உடல் புதைக்கப்ட்டது.

யாருமே மாயாவிக்கு ஆறுதல் கூறக்கூட கிட்டப்போகவில்லை. தனிமையில் புழுவாய் துடித்தான்.

வெளிப்பார்வையின் கண்களுக்கு தெரிந்ததெல்லாம்....மாயாவி ஒரு மனசாட்சியில்லாத மிருகம். பணத்திற்காக பெற்ற பிள்ளையைக்கூட அடைகுவைப்பவன். ஈவிரக்கமில்லாத அரக்கன். வெறிகாரன், மனைவி மக்களை காப்பாற்றத்தெரியாதவன்.

ஆண்டவன் ஒருவனைத்தவிர அவன் பணத்திற்காக பட்ட துன்பம் அந்த ஏழை பட்டபாடு, இலவச மருத்துவம் என்ற பெயரில் அங்குள்ள மருந்துகளை பணத்திற்கு விற்பது..அதனால் மாயாவி போன்ற ஏழை நோயாளர்கள் பாதிக்கப்பட்டது இவையாவுமே தற்போது அவனையும், ஆண்டவனையும் தவிர வேறுயாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

மாயாவியிடம் எல்லோரும் கேட்டுப்பார்த்தார்கள் எங்கதான் உன் மகனை அனுப்பிவச்சாய் சொல்லுப்பா நாம போய் கூட்டிவந்து கடைசியா தாயின் முகத்தை பார்க்கட்டும் என்று...

யாருடைய கேள்விகளுக்கும் பதில் கூறவில்லை. அவன் மெளனமாகயிருந்தான்....அப்ப கூட ஒரு முதியவர் அடிச்சுக்கலைக்கவேணும் இந்த நாய என்றார்....

அவனுக்கு மட்டும் தெரிந்தது....

கண்ணை விரலால் கீழே அழுத்தி லைட் அடித்துப் பார்த்த டாக்டர்.....

ம்....சொறி மாயாவி....உங்க வைப் மங்காவிற்கு ரொம்ப பாட் கெண்டிஷன். பள்ஸ் குறைஞ்சுகொண்டே போகுது....இன்னைக்கு நைட் 12 மணிக்கு மேல அவங்க உயிரோடு இருந்தாங்க என்றால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க...கண்ணில பார்த்தேன்...பிழைக்கிறதிற்கு நோ சான்ஸ்......வெரி சொறி....இன்னும் 6 மணித்தியாலம் இருக்கு. இனி அவங்களால பேசவும் முடியாது.....முடிஞ்சா உங்க பையனை கூட்டி வாங்க....ஆனா..........நீங்க போகாகதீங்க வேறு யாரையும் அனப்பிவையுங்க...........எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.முடிஞ்சவரையில பக்கத்தில இருங்க.....டேக் கெயார்.

மனம் படும் வேதனையில் கண்ணீர் அருவிபோல ஓட அவன் யாரை உதவிக்கு கூப்பிடுவது...???

வீட்டிற்குக்குள் ஓடிப்போய் ஈஸ்வரன் கொடுத்த அட்ரசை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு அவன் இருக்கும் ஏரியாவில் நல்ல நண்பரான பாண்டியண்ணனிடம் கொடுத்து விசயத்தை சொல்லுகிறான்...அவரோ......

இனி எல்லாம் ஆகாது மாயாவி. அவன் இனி வரும் வரையில் ஐஸ்ரூமில வைச்சிருக்க எல்லாம்..அல்லது வீட்டிலதான் 2 நாள் வச்சிருக்கக்கூட முடியாது. பணம்தான் அதிகம் செலவாகும். நான் இன்னைக்கு கொழும்பு போகிறன். வர ஒரு கிழமையாகும். முடிஞ்சா பையனை கூட்டி வர ஒழுங்கு செய்யிறன். ஆனா அவன் வந்தாலும் உன்கூட ஒட்டமாட்டான்.....உன்னில சரியான கோபமாகத்தான் இருப்பான்....ஆண்டவன் இருக்கான் நீ யாரைப்பற்றியும் கவலைப்படாதே.......ஆகவேண்டியது நிறைய இருக்கு...இந்தாப்பா இதில 2000. ரூபாயிருக்கு செலவிற்கு வச்சுக்கோ...

ம்.பணம்..பணம்.....இந்த பாழாய்ப்போன பணம் இப்ப என் கையில இறந்த உடலுக்கு கிடைக்கிற பணம் அப்ப நான் கதறினேனே......கிடைச்சுதா..அப்பவே கிடைச்சிருந்தா என் மங்கா என்னைவிட்டு போயிருப்பாளா.இல்ல என் மகனைத்தான் நான் அனுப்பிவச்சிருப்பனா...?

சரி...சரி மனசை தேற்றிக்கொள்......நடந்ததை நினைச்சு இனி வருத்தப்பட்டு என்ன பிரையோசனம்...எனக்கு நேரமாகுது நான் வாறன்.

வெறும் வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு விடைபெற்றார் பாண்டியன்.

யாருக்குத்தெரியும் இந்த உண்மை..?

அவனையும், அந்த அண்ணனையும் தவிர வேறுயாருக்கும் தெரியவாயப்பில்லை. மீண்டும் கூடியிருந்து வாய்க்கு வந்தபடி திட்டுக்களும், பேச்சுகளும் ஏராளம்.

மனம் நொந்து அழுதான்...இரவிரவாக அழுதான்.ஐயோ.ஐயோ எனக்கதறினான்.தனிமையில் வெந்தான்......யாருமற்ற அனாதைபோல உணர்ந்தான்....தான் செய்த தவறு என்ன என்று தனனைத்தானே கேட்டு நொந்துகொண்டான்.....எல்லாமே முடிந்துபோன கதை...

நாட்கள் நகர்ந்துகொண்டன....பல நாட்கள் மூடியிருந்த அவன் சயிக்கிள் கடை மீண்டும் திறந்தது. அவன் இப்போது பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு செயல்பட்டான். எதற்காக ஏன்...?

பொறுத்திருங்கள் தொடரும்...

--------------------
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8715&hl=
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி