Sunday, June 22, 2008

யார் மீது குற்றம்....?

வானத்தில் சிறகடித்துப்பறக்கும் பறவை போல் நானும் ஒரு காலத்தில், என் எண்ணச்சிறகை விரித்து இந்த உலகமே எனக்கு மட்டும்தான் சொந்தம் என பறந்து திரிந்து கொண்டு இருந்தேன். ஆனால் இன்று கண்ணீரால் உடல் கழுவி, விடும் பெருமூச்சு வெப்பத்தால் காய்ந்து வெந்து துடித்துக்கொண்டிருக்கிறேன்.

பெரிய மாடி வீடு, என் பெட்ரூமோடு சேர்த்து பெரிய சுவிமீங் பூல் போல் குளியறை, வெளியில் செல்ல கார். வீட்டிற்குள் நிறைய பொழுதுபோக்குகள்....ம்.இப்படியே என் வசதியான வாழ்க்கைக்கு பட்டியல் போட்டாலும் பக்கங்கள் நிறைந்து வழிந்துவிடும்.

இன்றோடு என் வயது 18. இதனை சந்தோசமாகக் கொண்டாட யாருமே என் அருகில் இல்லை. எப்படி எல்லாமோ வாழ்ந்த நான் இன்று இந்த சிறு கூண்டுக்குள் சிறைச்சாலை என்னும் இடத்தில் சிறு வெளிச்சத்தில் கண்ணீரால் இதனை எழுதுகிறேன்.

எல்லோரைப்போலவும் 17 வயதில் 12 ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது, எனது மொழியைச்சேர்ந்த ( தமிழ்) ஆரம்பத்தில் நண்பன் அவன், நாள் செல்லச்செல்ல காதலன் ஆனான். எப்படியாவது அம்மா, அப்பாவிடம் கூற வேண்டும் என முடிவெடுத்தேன்...அடிக்கடி போன் கதைப்பதைப்பார்த்து வீட்டில் பூகம்பம், போனை பறித்து வைத்தார்கள். கடுமையான காவல் போட்டார்கள்.

யாருமே என்னோடு அன்பாக கதைக்கவில்லை. அம்மாவின் அப்பாவின் சொந்தங்கள் எல்லோருக்கும் நான் பிழைவிட்டதாகச்சொல்லி என்னை வேறு நாட்டிற்குப் போகும் படி சொன்னார்கள் முடியாது என அழுது மறுத்தவிட்டேன். பல தடவை அப்பா அறைந்த வடுக்கள் கன்னத்தில் மறையாமல் இருந்தது. அது மறையும் வரைக்கும் என்னை வெளியில் அழைத்துச்செல்லமாட்டார்கள்.

கனடா நாட்டுச் சட்டம் பிள்ளைகளுக்கு அடித்தால் ஜெயிலுக்குப் போகவேண்டும். அதுபோல்தான் ஏனைய நாடுகளிலும் என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரிந்த வியடம்.வீட்டிலும் தனியாக விட்டுச்செல்ல மாட்டார்கள்......எனது கொம்பியுட்டர் எல்லாம் இன்டர் நெட் கட் பண்ணி என்னை வீட்டுக் கைதிபோல் கண்காணித்து வந்தார்கள்.

அம்மா நித்திரைக்குப் போனாலும் எனது ரூம் சாவியை என்னை வைத்துப் பூட்டி எடுத்துவிட்டே தூங்குவா...தூங்குவதாக சொல்லுவா ஆனால் அவ யாரோடையோ வெகு நேரம் போனில கதைப்பா.......நான் குளிக்கும் போதுகூட பாத்றூம் கதவு சாத்தக்கூடாது என நிர்ப்பந்தம். அதற்காக கதவின் மேல் தடித்த டவள் போட்டுவிடுவா .இன்று இந்த ஜெயிலில் வாழ்வதைவிட மிகவும் கொடுமைப்பட்டே வாழ்ந்தேன்.

ஒரு நாள் நான் மயங்கி விழுந்துவிட்டேன். டொக்டரிடம் கொண்டு போனார்கள். அப்போது காரில் ஏறும் போது ஓடிவிட்டேன். எனது காதலனுக்கு போன் போட்டேன். அவனும் அந்த இடத்திற்கு வந்தான். இருவரும் ஒரு இத்தாலி நண்பன் வீட்டில் ரூமில் இருந்தோம். அம்மா அப்பா பொலிசுக்குப் போன் செய்த போது.....அவர்கள் 16 வயதிற்கு மேல் அப்படியிருக்கலாம் என்று நிராகரித்து விட்டனர்.கொஞ்ச நாள்தான்....மீண்டும் நான் சிறகடித்துப்பறந்தேன்.

என் காதலனுடன். என்னை படிப்பிப்பதாகச்சொன்னான். நம்பினேன். என்னையே கொடுத்தேன். அவன் ஆசைப்பட்ட நேரமெல்லாம் என்னோடு அவன் பொழுதுகள். அவனே தெய்வம் என்று வாழ்ந்தேன்.ஒரு நாள் வரவேயில்லை. அந்த வீட்டில் நான் தனியாகஇருந்தேன். போனில பேசினான். கார் பழுதாகிவிட்டதாகச் சொன்னான். நம்பினேன். மறு நாள் வந்தான் , கண்டவுடன் கட்டிப்பிடித்து ஓ....என்று அழுதேன்.

என்னை விட்டிட்டு எங்கேயும் போகாத என்று கதறினேன். ம்ம்.....என்று விட்டு போனில் யாரோடோ பேசினான். மீண்டும் நண்பனுக்கு சுகமில்லை என்று சொன்னான். நம்பினேன்.......உடனே போயிட்டு வருவதாகச் சொன்னான் வரவேயில்லை. இத்தாலிக்கார வீட்டு ஓனர் நல்ல ஆன்டி. அவ அப்பத்தான் 1 மாதம் இத்தாலிக்குப்போயிட்டு வந்தவ. அவ சொன்னா.......முதல் யாரோ பிலிப்பையின் கார பிள்ளையோட இவன் வந்து தங்கிப்போனவன்.

நான் கேட்டதிற்கு தன் கேர்ள் பிரண்ட் என்று சொன்னவன் என்றும். இவன் நல்லம் இல்லை. நீ உன் பேரன்ட்சோட போயிடு என்றா.எனக்கு தலைசுற்றியது. நம்ப முடியாமல் இருந்தது. எதுக்கும் அவன் வர கேட்போம் என்று இருந்தேன். மறு நாள் வந்தான்.....உடனே கேட்டேன். பளார் என்று அறைந்தான். அவ சொன்னா நீ நம்புவியா எனக் கேட்டான். ஐயோ மன்னித்துக்கொள் என காலைப்பிடித்து கெஞ்சினேன். கோபித்துக்கொண்டு போனான். பின்பு வந்தான். நாம வேற இடம் பார்க்க வேண்டும் என்றான். சரி என்றேன்.

நாளாக அவன் வரவேயில்லை. என் நிலமையை எண்ணி தலையில் அடித்துக்கொண்டேன். அம்மாதானே எப்படியும் என்னில் பாசம் இருக்கும் என்று அம்மாவிற்கு போன் போட்டேன். நான் பகுதி நேரமாக வேலை செய்ததால் கொஞ்ச பணம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு அம்மாவிடம் போக முடிவெடுத்தேன். அம்மா என் குரல் கேட்டவுடன் சீ நாயே என்று வைத்துவிட்டா. எனது சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா இப்படி எல்லோரையும் கெஞ்சினேன்.

உன்னை வீட்டில வைத்திருந்தால் எங்கிட பிள்ளையும் கெட்டுவிடும் என்றார்கள். செத்துப் போடி என்று கூட சொன்னார்கள்.மனம் மீண்டும் அவர்களை நாடியது. பலனில்லை. அம்மா வீடு போனேன்.அழுதேன்....மன்னிப்பு கேட்டேன். அப்பா தன்ர ஆட்களை கூப்பிட்டு என்னை வெளியில் மழைக்குள் தள்ளி விட்டார். யாரோ அங்கிள் எனக்காக கதைக்கப் போனார்.

அவரையும் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர் என்னைப் பெற்றவர்கள்.என்னிடம் இருக்கும் பணத்தில் ஒரு பாருக்குப்போனேன். எனது உயரத்தை பார்த்து விட்டு ஐடி எதுவும் கேட்காமல் எனக்கு 18 என்று சொல்ல நம்பி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குடித்தேன். பெயர் தெரியாத வகை வேண்டி குடித்தேன். சத்தி எடுத்தேன். கவலைகள் மறந்தேன். பல தடவை போனேன். அதன் பிறகு ஒரு நாள் ஐடி கேட்டு பிடிபட்டுவிட்டேன்.இதோ இந்த ஜெயிலில் நின்மதியாகயிருக்கிறேன். என்னை வெளியில் எடுக்க யாருமே எனக்கு இல்லை. இன்றோடு எனக்கு 18 வயது.

ஒரு பிள்ளை லவ் பண்ணுவது குற்றம் என்றால் எங்க அம்மா, அப்பாவும் லவ் மரேஜ்தான். ஏன் அவர்கள் குற்றம் செய்யவில்லையா. நான் லவ் பண்ணினால் ஏன் அவர்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களால்தான் நான் இன்று இந்த நிலமைக்கு ஆளானேன். மன்னிப்பு கேட்டுக்கூட போனேன். ஏன் மன்னிக்க மறுத்தார்கள். பெற்ற பிள்ளையை விட மானமும், உறவுகளுமா பெரிது.

இப்பொழுது நான் தெளிந்து விட்டேன். எனக்காக மட்டும் வாழத் துணிந்துவிட்டேன். என்னாலும் நாலு ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என வாழப்போகிறேன். இன்றோடு என்னை வெளியில் அனுப்பப்போவதாகச் சொன்னார்கள். அம்மா, அம்மா என்கிறார்கள். இப்படியும் அம்மா மார்கள் இருக்கிறார்கள்.நீங்கள் சொல்லுங்கள் யார் மீது குற்றம்

முற்றும்.

ஆக்கம்: தனிமதி
www.nilafm.com

No comments: